சீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா!
சென்னை: ஒரு பிரச்சனை குறித்து பேசும் போது முதலில் சொன்ன கருத்துக்கு நேர் எதிர்மாறான கருத்தை சொல்வது நடிகர் ரஜினிகாந்த் பாணி. அதே பாணியை தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் பின்பற்றி அசத்தி வருகிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை, பாஜக ஆகியவை குறித்து கருத்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாகின. ஒவ்வொருமுறையும் தாம் சொன்ன கருத்துக்கு நேர் எதிரான கருத்துகளை ரஜினிகாந்த் சொல்வது அரசியல் அரங்கில் நகைச்சுவையாகிப் போனது.
தற்போது இந்த பாணியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா கையில் எடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று பிரேமலதா அளித்த பேட்டி:
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. கமல்ஹாசனும் கூட அதேபோல்தான் பேசி வருகிறார். அதற்காக சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் டாக்டர் பட்டம் என்பது மலிவான ஒன்றாக வாங்கும் பொருளாகிவிட்டது. அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்குவது என்பது சரியான ஒன்றுதான். அதில் விமர்சனம் எதுவும் இல்லை.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இத்தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.