கொரோனா பரவுவதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவொற்றியூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவி இழந்தாலோ அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
பிப்ரவரி 27 ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி. பி. சாமி, பிப்ரவரி 28 ஆம் தேதி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 10 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.
இதனால் மூன்று தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் வரை உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ, குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இடைத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்திருந்தார் சத்யபிரதா சாஹூ.
சின்ன வைரஸ்.. என்னை கொரோனா என்ன செய்யும்?.. அலட்சியம் காட்டிய பிரேசில் அதிபருக்கு மீண்டும் தொற்று!
இந்த நிலையில் கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.