பாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவும் இடம்பெற்றால் நிச்சயம் திமுக கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
உதயசூரியன் சின்னம்?
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக புதியதாக ஒரு சின்னத்தைப் பெற்று அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது சிரமம். அந்த சூழ்நிலையில் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துவது சாதகமானதாக இருக்கும் என திமுக தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாமக வந்தால் குட்பை
எங்களைப் பொறுத்தவரை இந்துத்துவா சக்திகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான் முதன்மை. திமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்படும். கூட்டணிக்கு தலைமை தாங்குகிற கட்சி வெற்றியை நோக்கித்தான் வியூகம் வகுக்கும். பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அது அவர்களது விருப்பம். பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது. அதில் 2-வது கருத்துக்கே இடமே இல்லை.
ஒற்றுமை சீர்குலைவு வியூகம்
நாங்கள் ஜாதிய அரசியலை எதிர்க்கிறோம். அத்தகைய ஆபத்தான சக்திகளான பாமக, பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். பிற்படுத்தப்பட்ட மக்கள்- தலித்துகள் இடையேயான ஒற்றுமையை சீர்குலைப்பதுதான் பாஜகவின் வியூகம்.
பாமக அரசியல்
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு என பாமக கோருவது அந்த சமூகத்தை திருப்திபடுத்துகிற ஒரு நடவடிக்கை. அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான உத்தியாக, ப்ளாக்மெயில் அரசியலாகவே அதை பார்க்கிறோம். வன்னியர் சமூகத்துக்கோ வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கோ நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பாமக தலைமையில் இரட்டை வேடத்தைத்தான் எதிர்க்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.