சர்வதேச சந்தையில் உயரும் கச்சா எண்ணெய்.. உள்ளூரில் ஆணி அடித்தார் போல் இருக்கும் பெட்ரோல் விலை.. ஏன்?
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு நாட்களில் சுமார் 0.15% உயர்ந்துள்ள போதும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 14 நாளாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதி முதலே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
குறிப்பாக ராஜஸ்தான். மத்தியப் பிரதேசம் உட்பட நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டியும்கூட விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. மாறாக சில முறை பெட்ரோல், டீசல் விலை சில குறைக்கப்பட்டது. தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுவதாகப் பரவலாக விமர்சனம் எழுந்தது.
தொடர்ந்து 14ஆவது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.8 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 85.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 80.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.98 ரூபாய்க்கும், டீசல் 87.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 90.77 ரூபாய்க்கும் டீசல் 83.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 63.37 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 0.15% உயர்ந்துள்ளது. வழக்கமாக, இந்தியாவில் பெட்ரோல் விலை உயரும்போது கச்சா எண்ணெய் விலை உயர்வே அதற்குக் காரணமாகக் கூறப்படும் ஆனால் கடந்த இரு நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.