தமிழகத்தில் சமூகப் பரவல் மூலம் கொரோனா தாக்கம் இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் சமூகப் பரவல் மூலம் கொரோனா தாக்கம் இல்லை என்பதை ரேபிட் கிட் பரிசோதனை உறுதி செய்திருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் சமூகப் பரவல் மூலம் கொரோனா பாதிப்பு இல்லை என்பது ரேபிட் கிட் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த கூடாது.
அப்படி யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு- இன்று 2 பேர் உயிரிழப்பு
இறந்த பிறகு ரூ.1 கோடி கொடுப்பது முக்கியமா? கொரோனா வராமல் தடுப்பது முக்கியமா? என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். ரேபிட் கிட் விலை விவகாரத்தில் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மொத்தம் 613 இடங்களில் கொரோனா நோய் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.