தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த தகவலும் இல்லை.. எஸ். பி எச்சரிக்கை!
சென்னை: தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்பி ராவலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைக்கேல்பட்டியில் இருக்கும் அந்த பள்ளியில் +2 படித்துக்கொண்டு இருந்த மாணவி ஹாஸ்டல் வார்டன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எல்லா ரூமையும் சுத்தம் பண்ணு.. வார்டன் கொடுத்த டார்ச்சர்.. தஞ்சாவூரில் +2 மாணவி தற்கொலை.. பின்னணி
தற்கொலை
விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் தான் மனம் உடைந்ததாகவும், தனக்கு தொடர்ந்து வார்டன் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு அவர் தினமும் பல விதங்களில் அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தால் வேறு வழியின்றி பூச்சி மருந்தை குடித்ததாகவும் அந்த மாணவி மரணம் அடையும் முன் குறிப்பிட்டு இருக்கிறார்.
வழக்கு
இந்த வழக்கில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி பூச்சி மருந்தை குடித்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமான நிலையில் நேற்று முதல்நாள் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத மாற்றம்
இந்த நிலையில் தஞ்சாவூர் மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற விவகாரம்தான் காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில அரசியல் தலைவர்களும் இதே விஷயத்தை குறிப்பிட்டு உள்ளனர். அதன்படி அந்த மாணவி மரணமடையும் முன் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்தி ஒன்று ஊடகங்களில் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வார்டன்தான் மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக உறுதிப்படுத்த முடியாத செய்தி ஒன்று ஊடகங்களில் வெளியாகிக்கொண்டு இருக்கிறது..
தஞ்சை மாணவி
இந்த நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரை யாரும் மதமாற்றம் செய்ய முயன்றதாக எந்த தகவலும் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்பி ராவலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவியை மத மாற்றம் கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம். இது தொடர்பான பொய்யான செய்திகள் பரவுகின்றன.
விசாரணை
முதற்கட்ட விசாரணையில் இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவியின் அடையாளங்களை வெளியிடுவது தவறு. சட்ட வழக்கு, பாதுகாப்பு தேவையான குழந்தைகள், 18க்கு வயதுக்கு கீழ் இருக்கும் victim தொடங்கி யாருடைய புகைப்படம், பெயரையும் வெளியிட கூடாது. மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
|
மதமாற்றம் இல்லை
மாணவியின் பெயர், பள்ளி பெயர் கூட வெளியிட கூடாது. அவர்களின் சொந்த ஊர் பெயரையும் வெளியிட கூடாது. பெற்றோர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தில் எங்கும் மதமாற்றம் குறித்து அவர்கள் பேசவில்லை. மதமாற்றம் குறித்து அவர்கள் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி ராவலி ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.