சூப்பர்.. 3 மாதங்களுக்கு எந்த வங்கியும் இஎம்ஐ வசூலிக்காது.. தமிழக நிதித்துறை செயலாளர் விளக்கம்
சென்னை: அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்கள் மீதான இஎம்ஐ வசூலிக்கப்பட மாட்டாது என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இஎம்ஐ உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்பட மாட்டாது. ரிசர்வ் வங்கி உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து அதிக விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகள் இஎம்ஐ வசூல் செய்யாமல் இருப்பதற்கான அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
ஆனால், இந்த விஷயத்தில் வங்கிகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. சில கடன் வழங்கும் ஏஜென்சிகள், உங்கள் வங்கி இருப்பில் போதிய பணத்தை வைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பியது இந்த பரபரப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
வங்கியில் பணம் இருந்தால், தானாகவே அது எடுத்துக் கொள்ளப்படுமா, ஒருவேளை பணம் இல்லாவிட்டால் பவுன்ஸ் ரேட் என்ற பெயரில் அபராத தொகையை வசூலித்தால் என்ன செய்வது என்பது போன்ற குழப்பங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்தன.
இந்த நிலையில்தான் சென்னையில் இந்தியன் வங்கி ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இன்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் இது பற்றி கூறுகையில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு
இருப்பினும், இன்னமும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை அந்தந்த வங்கிகள் தங்கள் வாடிக்கையாளருக்கு மெசேஜ் மூலமாக தெரிவித்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு, கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் தகவலை அனுப்பி உள்ளது. அதில் மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ வசூலிக்கப்பட மாட்டாது என்றும், இந்த சலுகையை தேவையில்லை என்பவர்கள், வேண்டாம், அதாவது நோ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வளவு வெளிப்படையாக அனைத்து வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களும் செயல்பட்டால் மக்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படாது.