தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா.. முதல்வர் பழனிசாமி பதில்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்றார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ரூபாய் 136 கோடி மதிப்பில் சுமார் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கொரோனா மருத்துவமனையை மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று(செவ்வாய்கிழமை) தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசுகையில், "இந்த மருத்துவமனையானது சுமார் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில்
ஆக்சிஜன் வசதிகள்
அதில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், இங்கு 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 16 கூறு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியோகிராம், 28 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சமுக தொற்றாகவில்லை
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 57.89 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்,.
பேருந்துகள் இயங்குமா
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இன்னொரு முறை தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை" என்றார். இதன் மூலம் ஜூலை 31க்கு பிறகு தமிழகத்தில் கொரோனாவை காட்டி ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தெரிகிறது. மேலும் வரும் 16ம் தேதி முதல் பேருந்துகள் இயங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் அறிவிப்பு
மக்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகள் இல்லாததால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள், வீட்டு வாடகை கொடுக்க வழியில்லாமலும், மின் கட்டணம் செலுத்த வழியில்லாமலும், அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய வழிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு தந்துள்ள இலவச உணவு தானியங்களை வைத்துதான் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு கடினமான இந்த பொதுமுடக்கத்தை கடந்து வருகிறார்கள். எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என முதல்வர் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.