பெண்கள் பாவம்.. மளமளவென அதிகரிக்கும் தேவையற்ற கர்ப்பங்கள்.. தமிழகத்தின் அவசர தேவையை கவனிக்குமா அரசு?
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேவையற்ற கர்ப்பங்கள் காரணமாக குழந்தை பிறப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர் மகளிர் நலன் சார்ந்த அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள்.
இதற்கு முக்கியமான காரணம், எந்த ஒரு மருந்து கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் என்பதே கிடைக்காத நிலை தொடர்ந்து நீடிப்பதுதான்.
பாதுகாப்பற்ற உடலுறவு மேற்கொண்டு 72 மணி நேரத்துக்குள் இதுபோன்ற கருத்தடை மாத்திரையை, சம்மந்தப்பட்டப் பெண் எடுத்துக் கொண்டால் தேவையற்ற கர்ப்பம் உருவாவது தடுக்கப்படும்.
பட்டுச்சேலை மடிப்புலனா கிரங்கி போனேண்டி.. இந்திய அளவில் வைரலாகும் தமிழக பெண் ரோபோ!
மெடிக்கல்களில் மாத்திரைகள் இல்லை
2010ஆம் ஆண்டு இது போன்ற மாத்திரைகள் பரவலாக கிடைக்கத் தொடங்கின. ஆனால் படிப்படியாக மருந்தகங்களில் இந்த மாத்திரைகள் கிடைப்பது அரிதாகி கொண்டே சென்று கடைசியில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு மருந்துக் கடைகளிலும், கருத்தடை மாத்திரைகள் என்பது இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் மருத்துவ நிறுவனங்களின் தலைநகரம் என்று அழைக்கக்கூடிய சென்னை நிலவரம் கூட இப்படித்தான் இருக்கிறது.
மறைமுகமாக சப்ளை நிறுத்தம்
திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்தை தாண்டிய உடல் உறவுகள் அதிகரிப்பதற்கு இதுபோன்ற கருத்தடை மாத்திரைகள் ஒரு ஊக்கமாக இருந்துவிடும் என்று கருத்தின் அடிப்படையில், மறைமுகமாக இதுபோன்ற மாத்திரைகளின் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் மகளிர் அமைப்பினர். அரசு நேரடியாக இந்த மாத்திரைகள் மீது தடை விதிக்கா விட்டாலும் கூட மறைமுகமாக தொடர்ந்து தடை நீடிப்பதுதான், இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள் அவர்கள்.
பெங்களூர், புதுச்சேரி
இது போன்ற மாத்திரைகள் வாங்க வேண்டுமானால் புதுச்சேரி அல்லது பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து தருவிக்க வேண்டிய தேவை உள்ளது. தங்கள் நண்பர்கள் மூலமாக இவ்வாறு மாத்திரைகளை பெற்றாலும் அதற்குள்ளாக 72 மணி நேரம் கெடு முடிந்து விடும் என்பதால் அதற்கு பிறகு இந்த மாத்திரைகள் பலன் அளிப்பது சந்தேகம். தற்போது ஊரடங்கு காலம் என்பதால், பிற கருத்தடை முறைகளை பெண்கள் பின்பற்ற முடியாத நிலையில், இது போன்ற மாத்திரைகள் தேவை அதிகம் உள்ளது. ஆனால் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளுக்கு, தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த சில மாதங்களில் தேவையற்ற கர்ப்பங்கள் மற்றும் பிரசவங்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள்.
அறுவை சிகிச்சை அதிகம்
இந்த வருட துவக்கத்தில், ரீப்புரொக்டிவ் ஹெல்த் சர்வீஸ் அமைப்பு நடத்திய ஒரு சர்வே முடிவில், தமிழகத்திலுள்ள 0.2% பெண்கள் கருத்தடை மாத்திரைகளை நம்பியுள்ளதாக கூறியுள்ளனர். பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருத்தடை முறைகளைத்தான் 94% தமிழக பெண்கள் பின்பற்றுகிறார்கள். தேசிய அளவில் இது 75% என்ற அளவுக்கு உள்ளது.
தேவையற்ற கர்ப்பங்கள்
தமிழ்நாட்டில், தற்போது லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், பெண்கள், கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது இயலாத விஷயமாக உள்ளது. எனவே கருத்தடை மாத்திரைகள் அவர்களுக்கான இப்போதைய அவசர தேவையாக உள்ளது. இப்போதைய நிலை நீடித்தால், தமிழகத்தில், சுமார் 1,24,086 தேவையற்ற கர்ப்பங்கள், 35,489 குழந்தை பிறப்புகள், 75,446 கருக்கலைப்புகள் அதிகரிக்க கூடும். தாய் இறப்பு விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் ஆதங்கம்
இதுகுறித்து மகளிர் நல நிபுணரான பெண் டாக்டர் ஒருவர் கூறுகையில், லாக்டவுன் காலகட்டத்தில், தேவையற்ற கர்ப்பம் தொடர்பாக பெண்களிடமிருந்து எனக்கு அதிக தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கருத்தடை மாத்திரைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க முடியவில்லை. ஏனெனில் மாத்திரைகள் கிடைப்பதில்லை. எல்லா உடலுறவும், குழந்தை உருவாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், பதற்றப்படாமல் அடுத்த மாதவிடாய் காலம் வரை காத்திருங்கள் என்பதுதான் எனது முதல் அட்வைஸ். ஆனால், சில நேரங்களில், கருத்தடை மாத்திரைக்கு மாற்றாக, கூடுதல் டோஸ் புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரையை பரிந்துரைக்கிறேன். புரோஜெஸ்ட்டிரோன் மாத்திரையின் செயல்திறன், கருத்தடை மாத்திரை அளவுக்கு இருக்காது. ஆனால், இந்த நேரத்தில் ஒரே வழி இதுதான் என்கிறார் அவர். இருப்பினும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரையை எடுப்பது, குழந்தையின் உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைகளின் வருங்காலத்தை கெடுத்துவிடும் வாய்ப்பு இருப்பதால், பெண்கள் அச்சப்பட்டு, புரோஜெஸ்டிரோன் மாத்திரைகளை எடுப்பதில்லை. ஆனால், கருத்தடை மாத்திரைகள் என்றால், உடலுறவு முடிந்த 72 மணி நேரத்திற்குள் விழுங்கிவிட்டு, பெண்களால், நிம்மதியாக இருக்க முடியும்.
பிற கருத்தடை முறைகள்
திருமணமான பெண்கள் காப்பர்-டி அல்லது ஐ.யு.டி. வழிமுறைகளையும் பின்பற்றலாம் என்கிறார்கள் டாக்டர்கள். மகளிர் மருத்துவ வல்லுநர்கள், கிளினிக்குகள் அல்லது கருக்கலைப்பு நடைமுறைகள், எல்லா பெண்களுக்கும் கிடைக்காத லாக்டவுன் காலத்தில், 1,24,086 க்கும் மேற்பட்ட தேவையற்ற கர்ப்பங்கள் உருவாகும். இது, பெண்களின் ஆரோக்கியத்தையும் உயிரையும் பணயம் வைக்கும் பாதுகாப்பற்ற நிலை. வேறு வழியில்லாமல் அதிகமான பெண்கள் மருத்துவ ரீதியில், அல்லது வெளியே தெரியாத கருக்கலைப்பு முறைகளை நாட வேண்டியிருக்கும். இது அவர்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் கருத்தடை மாத்திரைகள் சப்ளை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.
பெண்களின் தேடுதல்
தேவையற்ற கர்ப்பங்களை கட்டுப்படுத்த உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பது ஆணுறைகள். ஆனால் லாக்டவுன் காலகட்டத்தில், ஆணுறைகளுக்கு நாடு முழுக்க தட்டுப்பாடு உள்ள நிலையில், தமிழகத்தில் கருத்தடை மாத்திரைகள் சப்ளையும் இல்லாதது இரட்டை தலைவலியாக உள்ளதாம். இதனால் நாட்டு வைத்தியத்தில் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க முடியுமா என்ற தேடலில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். கூகுள் தேடலில் இதுபற்றிய தேடல் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்க அரசு வழிவகை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் எழுந்துள்ளது.