தனிக்கட்சி தொடங்க திட்டமா? பரபர செய்திக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை விளக்கம்!
தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி தவறானது என்று அதிமுக எம்பி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி தவறானது என்று அதிமுக எம்பி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.
லோக் சபா தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் லோக் சபா தேர்தலில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அதிமுக எம்.பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார். பாஜக கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தம்பிதுரை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாஜகவின் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராகவும் தம்பிதுரை பேசினார். அதேபோல் ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அவர் பேசினார்.
இந்த நிலையில் தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலக போகிறார் என்று தகவல்கள் வந்தது. இவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர போகிறார் என்று செய்திகள் வந்தது. அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், தம்பிதுரைக்கு அழைப்பு விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிலர் தம்பிதுரை தனிக்கட்சி தொடங்க போகிறார் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி தவறானது. இப்போது எனக்கு அப்படி எதுவும் திட்டமில்லை. அந்த செய்திகள் எல்லாம் வதந்தி.
தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. பாஜக கட்சி அதிமுகவை அடிமை போல நடத்துகிறது என்றுதான் கூறி இருந்தேன். அதிமுக லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்து விளக்கம் அளித்துள்ளார்.