"அது" இருந்தால், சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
சென்னை: எனக்கு எதிராக ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே 4 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூந்தமல்லி நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்ட பணிகளின் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:
ஜெயலலிதா விசுவாசி
1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். அப்போதிருந்தே நான் ஜெயலலிதா விசுவாசி. 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு, கோடநாடு இடம் தனியாரிடம்தான் இருந்தது. அந்த குடும்பம் நம்மை படாதபாடு படுத்தியது. கோடநாடு கொள்ளை என்பது கூலிப்படையினரால் செய்யப்பட்ட சம்பவம். கைது செய்யப்பட்ட சயானை திமுகவினர்தான் ஜாமீனில் இருந்து வெளியே எடுத்து உதவி செய்திருக்கிறார்கள். மனோஜ் மீது கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடநாடு சம்பவத்தில் தொடர்புள்ள கூலிப்படையினர் மீதும் கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சசிகலா குடும்பம்
தேவையே இல்லாமல் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலைச் சம்பவத்தில் எங்களுக்கு எதிரான ஆதாரம் கிடைத்திருந்தால் சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா?
திமுக பின்னணி
தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அளித்த பேட்டி, திமுகவினர் ஏற்பாடு செய்த கபட நாடகம். எங்களுக்கு எதிராக எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை சட்டரீதியாக தவிடுபொடியாக்குவோம். பொய்யை பொருந்துவது போல் சொல்லுங்கள்.
சட்டப்படி
சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. சயான் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர். கொலை வழக்கில் தொடர்பு உள்ளவர். சயான் தனது உறவினரை பார்க்க செல்லும்போதுதான் விபத்தில் அவரது மனைவி, குழந்தைகள் இறந்து போகிறார்கள். சயான் மட்டும் தப்பித்து விடுகிறார். இந்த வழக்கு முடிந்து 2 ஆண்டு ஆகிவிட்ட பிறகும், திடீரென எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதை சட்டரீதியாக எதிர்கொண்டு தவிடுபொடி ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.