50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு
சென்னை: 50 வயது நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று பரவும் செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசு மறுத்துள்ளது.
இதேபோல் 30 வருடம் பணி நிறைவு பெற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு என்று பரவும் செய்தியிலும் உண்மையில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் 50 வயது நிரம்பியிருந்தால் கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று பரவியது.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக பரப்பப்பட்ட சுற்றறிக்கையில் 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த சுற்றறிக்கை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தமிழக அரசு மறுத்துள்ளது.
50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு என்ற பரவியது செய்திகளில் உண்மையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலர்களுக்கு எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தமிழக அரசு மறுத்துள்ளது.