மோடி அலையா? தமிழகத்தில் ஒரே அலை.. அது அம்மா அலைதான்.. ஜெயக்குமார்
தமிழகத்தில் எப்பவுமே அம்மா அலைதான் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: எந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் சரி, தமிழகத்தில் எப்போதுமே அம்மா அலைதான். அதுதான் தமிழகத்தின் நிலை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமாரிடம், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
"மக்களின் மனம் ஒரு சுரங்கம் போன்றது. அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. வடமாநிலங்களில் இந்தத் தேர்தல் முடிவுகள் இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்கள் மனநிலையை மதிப்பிட முடியாது
அம்மா அலை
ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, எப்போதுமே இருப்பது அம்மாவின் அலைதான். அதுதான் தமிழகத்தின் நிலையும்கூட. வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.
பலமாக இருக்கிறோம்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும்போதுதான் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம். செயற்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி முடிவு செய்யவேண்டிய விஷயம் இது. பலவீனமாக இருப்பவர்கள் தான் 4 பேரை கூட்டணியில் சேர்ப்பார்கள். பலமாக உள்ளவர்கள் கூட்டணியில் சேரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம்" என்றார்.
சகோதரி தமிழிசை
மோடி அலை பாபாதிக்கப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இந்தக் கேள்வியை, நீங்கள் பாஜகவினரிடம் கேட்கவேண்டும். சகோதரி தமிழிசை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்" என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.
திமுகவுக்கு போகிறார்
இதையடுத்து அதிமுக-அமமுக சேரும் வாய்ப்புள்ளதாக என்ற கேள்விக்கு, "அது ஒரு வதந்தி. அதிமுக என்பது இமயமலை போன்றது. அமமுக என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்றது. அவர்கள் திமுகவுடன் ஒரு கூட்டு வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் செந்தில்பாலாஜி திமுகவுக்கு செல்கிறார். ஏன், டிடிவி. தினகரனே கூட திமுகவில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.