EXCLUSIVE: நமக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை.. தைரியமா இருங்க.. மீண்டு வருவோம்.. டாக்டர் தரும் டிப்ஸ்
கொரோனாவை எளிதாக வெல்வோம் என டாக்டர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை: "நாம யாரையும் தேவையில்லாம கட்டிப்பிடிச்சிக்க மாட்டோம்.. கை குடுக்க மாட்டோம்.. தள்ளி தான் நிற்போம்.. அதனால நம் நாட்டில் பெரிய அளவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது.. உயிர் பயம் தேவையே இல்லை.. இந்த உயிர் எப்படி வேணும்னாலும் போலாம்.. உடனடி மரணம் என்பதும், இதுக்கு மருந்தே இல்லையேன்னு சொல்லும்போதுதான் பயமும் அதிகமாயிடுது.. நாம ஒரு சின்ன விஷயத்தை பெருசுபடுத்தி அதுக்குள்ளேயே நாம வாழ்க்கையை முடிச்சிக்குறோம்... இதுல இருந்து வெளியே வந்தாலே போதும்" என்கிறார் உளவியல் மருத்துவர் டாக்டர் ஸ்ரீநிவாஸ்!!
Recommended Video
21 நாள் தனிமைப்படுத்தப்படுதல் என்பது ஒரு தண்டனை என்று சிலர் நினைத்து கொள்கிறார்கள்.. அல்லது அவமானமாக நினைக்கிறார்கள்.. ஏதோ தங்களை ஒதுக்கி வைத்துவிட்டது போல புழுங்கி மனம் வெம்புகிறார்கள்.
பெரும்பாலானோர் கொரோனா முகாமில் இருந்தும், தப்பித்து செல்லும் விபரீதம் நடக்கிறது. தேனியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு இளைஞர் கதவை உடைத்து கொண்டு தெருவில் துணிகளை நிர்வாணமாக கிழித்துகொண்டு ஓடியதுடன், பாட்டி ஒருவரின் கழுத்தையும் கடித்தே கொன்றுள்ளார்!
தனிமைப்படுத்துபவர்கள் மட்டும் என்றில்லை, மதுப்பிரியர்களும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் தற்கொலைகளும், கொலைகளும் பெருகி வருகின்றன.. எதற்காக தனிமைப்படுத்தப்படுகிறதோ அதற்கான நோக்கமே சிதைந்து உயிர்பலியை பெருக்கி வருகிறது..
தனிமைப்படுத்துதல் என்பது மனித உயிர்களை பலி வாங்கும் அளவுக்கு கொடியதா.. புரிந்து கொள்பவர்கள் சரி கிராமப்புற மக்கள்? அவர்கள் இந்த 21 நாட்கள் என்பதனை எப்படி எதிர்கொள்வார்கள்? இந்த நாட்களில் அவர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பன குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக உளவியல் நிபுணர் ஸ்ரீநிவாசன் அவர்களிடம் பேசினோம்.. அப்போது அவர் சொன்னதாவது:
"கொரோனாவைரஸால் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே வருகிறது.. இப்படி ஒரு இழப்புகளை நாம பார்த்ததில்லை.. இதன் தன்மை என்னன்னு பார்த்தால் உடனடி மரணம் என்பதுதான்.. இதுக்கு முன்னாடி நாம இப்படி பார்த்தில்லை... அனுபவிச்சதும் இல்லை.. அதனாலதான் மக்களுக்கு பய உணர்வு இன்னும் வரல.. இது என்னன்னு தெரியல!
அதேமாதிரி இதன் பாதிப்புகள் என்னன்னு நாம பார்த்தால், மிக மோசமான நிலைமைக்கு போகலாம்.. 21 நாட்கள் ஊரடங்கு, 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. ஆனால் அதற்குள் இவை சரியாயிடுமா என்பது கேள்விக்குறி.. அதே சமயம் இது பாதிக்காமலும் போகலாம்.
சுத்தமா இல்லைன்னா பாதிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லைன்னா பாதிக்கும்.. தனிமனித ஒழுக்கம் மட்டுமே காப்பாத்தும் இப்படின்னு அரசு வலியுறுத்துகிறது.. ஒருமுறை பாதிப்புக்கு உள்ளானாலோ, பாதிப்பு இருக்கு என்கிற ஒரு சந்தேகம் வந்தாலோ தனிமைப்படுத்துதல் என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம். இதற்கு காரணம் இதை முன்கூட்டியே நம்மால் கண்டுபிடித்து சொல்ல முடியாது.. அதனாலதான் குறைந்தது 14 நாட்கள் என்று சொல்லி தனிமைப்படுத்தப்படுகிறோம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், நிறைய பேர் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.
முதலில் 14 நாட்கள் என்பது ஒரு தற்காலிக காலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் நமக்கு நோய் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என்பதையும் உணர வேண்டும். சாதாரண சளி, இருமல், காய்ச்சலாக கூட முடிந்து போய்விடலாம்.. அப்படி ஒரு நோக்கத்தோடுதான் இதனை அணுக வேண்டும். நம்மளால அடுத்தவங்களுக்கு போயிடக்கூடாது அப்படிங்கிற நல்லெண்ணமும் வளர்த்து கொள்ள வேண்டும்.
தனிமை என்று சொல்லும்போது கஷ்டமா பார்க்க வேண்டியதே இல்லை.. பல நேரங்களில் நமக்கு வாழ்க்கையில் விரக்தி, மனஅழுத்தம் வரும்போது இந்த தனிமையைதான் நாம் விரும்புகிறோம்.. தேடி ஏற்று கொள்கிறோம்.. ஆனால் இன்னைக்கு தனிமையில் இருங்க என்று ஒரு காரணத்துக்காக சொல்லும்போது இந்த விஷயம் பெரிதாக தாக்குகிறது.. இதற்கு காரணம் உயிர் பயம்தான்.
உண்மையை சொல்ல போனால், யாருக்கும் எதுவுமே ஆகாது.. இந்திய முறைப்படி பார்த்தால் நமக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.. அதனாலதான் நாம பெரிய அளவில் பாதிக்கப்படல.. இப்போ வந்திருக்கிற பாதிப்புகள்கூட வெளிநாட்டுல இருந்து வந்த பிரச்சனைதானே தவிர நமக்காக வந்தது வரல. இதையும் மக்கள் நல்லா புரிஞ்சிக்கணும்.
இந்த தனிமையில் உருப்படியான விஷயங்களை நாம நிறைய செய்யலாம்.. எவ்வளோ சிந்திக்க மறந்த விஷயங்கள் உள்ளன.. சிந்திக்க நேரம் இல்லாமல்கூட இருந்திருக்கோம்.. இவ்வளவு நாளா இந்த மொபைலை நமக்காகத்தான் யூஸ் பண்ணிட்டு வந்திருக்கோம்.. இந்த சோஷியல் மீடியாவையும் நமக்காத்தான் யூஸ் பண்ணிட்டு வந்திருக்காம்.. ஆனா இப்போ இதே சோஷியல் மீடியாவை பயன்படுத்தி உலகத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க கிடைச்சிருக்கு.. நம்மையே நாம் உற்சாகப்படுத்தி கொள்ளவும் இந்த தனிமையை பயன்படுத்தலாம்.. இசையில், ஆன்மீகத்தில், அறிவியலில் இப்படி கவனத்தை திருப்பலாம்... தியானம் செய்யலாம். உடற்பயிற்சி செய்யலாம்.
இது எல்லாவற்றையும்விட நான் முக்கியமா சொல்றது, 87 முதல் 89 சதவீதம் வரை மக்கள் சரியாகி வீட்டுக்கு போயிடறாங்க... இதை ஒன்னை மட்டும் மனசுல வெச்சுக்குங்க.. ரொம்ப மோசமான நிலையில போகும்போதுதான் உயிரு போகுமே தவிர, மற்றபடி பயம் இல்லை.. அதுக்கு முன்னாடியே சாதாரண நார்மல் மருந்துகளாலேயே சரி பண்ணிக்கலாம்.. அறிகுறி என்று வந்தவர்கள், சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பேர் இன்னைக்கு சரியாகி திரும்பி வீட்டுக்கு போய் இருக்காங்க.. ஆனால் அந்த புள்ளிவிரங்கள் நிறைய சொல்லப்படல... சரியாகி நல்லா இருக்கிறவங்களையும் நாம பேட்டி எடுத்து போடல.. அதனாலதான் இவ்ளோ பெரிய பிரச்சனையே!
மக்களுக்கு மனசில் பெரிய பயம் இருக்கு.. இனிமேல் நாம சொந்தக்காரங்களை பார்ப்போமா, பார்க்க மாட்டோமா, நாளைக்கு சம்பாத்தியம் என்னாவது? எப்படி வாழ்வது?ன்னு.. இதெல்லாம் எப்பவுமே நமக்கு இருக்கத்தான் போகுது.. அதனால தனிமைப்படுத்துதல் என்பதை இது ஒரு சுமையாக நினைக்ககூடாது. உயிர் பயம் தேவையே இல்லை.. இந்த உயிர் எப்படி வேணும்னாலும் போலாம்... இறப்பு விகிதம் என்று பார்த்தால் கொரோனா ரொம்ப குறைவுதான்.. இதான் உண்மை.. தினமும் பல்வேறு காரணங்களால இறந்து போறாங்க.. ஆனா இதுக்கு ஏன் இவ்ளோ பயம் என்றால் மருந்து இன்னும் கண்டுபிடிக்கல.. மருந்து இல்லாத ஒரு காரணத்தினால் இது பெரிசா தெரியுது.. இதையும் யோசிச்சு பார்க்கணும்.
அதேபோல மதுவுக்கு அடிமையானவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.. எங்கியுமே மது கிடைக்கவில்லை.. என்ன செய்றதுன்னே தெரியாமல் அலையறாங்க.. இவங்களும் தவறான முடிவுகளை எடுக்கறார்கள்.. எல்லாமே தற்காலிகம்தான்.. இதுவும் கடந்து போகும்.. ஒருவாரம் பிரேக் எடுத்துக்கிறதா நினைச்சிக்கணும்.. அடிமையாகி விட்டவர்கள்கூட இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு திருந்த முயற்சிக்கலாம்.. பழைய வாழ்க்கை திரும்ப இந்த 21 நாட்களை பயன்படுத்தி கொள்ளலாம்!!
யாருமே தவறான முடிவுக்கு போக கூடாது.. எப்போ விபரீதமான முடிவை நாம் எடுக்கிறோம்? இனிமேல் எனக்கு ஒன்னுமே இல்லையா அப்படின்னு நினைக்கும்போதுதான் இந்த எண்ணம் வருது.. காலம் போயிட்டேதான் இருக்கும்.. நல்லது, கெட்டது வந்துட்டேதான் இருக்கும்.. நான் நாம ஒரு சின்ன விஷயத்தை பெருசுபடுத்தி அதுக்குள்ளேயே நாம வாழ்க்கையை முடிச்சிக்குறோம்.. இது நமக்கு தேவையில்லாத ஒன்னு.. உலகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு... சந்தோஷமா இருக்க ஆயிரம் வழி இருக்கு.
இந்த ஊரடங்கு உத்தரவு யாருக்காக போடப்பட்டிருக்குன்னு நினைச்சு பார்க்கணும்.. அது நமக்காகத்தான்.. கொரோனாவை பார்த்து நீங்க ஓட தேவையில்லை.. நீங்க வீட்டுக்குள்ளயே இருந்தால் கொரோனவே பயந்து ஓடிடும்... தனிமைப்படுத்தி கொண்டால் பிரச்சனையே முடிந்துவிடும் என்பதுதான் முடிவு.. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஏன் பாதிக்கப்பட்டது என்றால், அவங்க பழக்கவழக்கம், கலாச்சாரம் வேற.. கை குலுக்கி கொள்வார்கள், கட்டிப்பிடித்து கொள்வார்கள், முத்தம் தருவார்கள்.. தோளோடு தோள் சேர்த்து அணைத்து கொண்டு வாழ்த்து சொல்லி கொள்வார்கள்.. இது அவங்களுடைய பழக்கம்.. அதனால அங்க உயிரிழப்பு அதிகமாயிடுச்சு.
நமக்கு இந்த பழக்கம் கிடையாது.. தேவையில்லாம கை குடுக்க மாட்டோம்.. தேவையில்லாம கட்டிப்பிடிச்சிக்க மாட்டோம்.. தள்ளி தான் நிற்போம்.. அதனால நமக்கு பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.. இதையும் தனிமையில் இருக்கும்போது யோசிச்சு பார்க்கணும். தன்னைதானே அசெஸ் பண்ணிக்கணும்.. இவ்வளவு நாள் எப்படி இருந்தோம், இனி எப்படி இருக்கணும் என்றெல்லாம் யோசிச்சாலே 21 நாட்களை எளிதாக கடக்கலாம்.. மனிதனுடன் மனிதன் பேச ஆரம்பிச்சால் உறவு மேம்படும்... பாசம் அதிகமாகும்!!" என்றார்.