பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டங்கள் இப்ப தேவை இல்லை.. சொல்வது கொளத்தூர் மணி
சென்னை: தந்தை பெரியார் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு என்பது இப்போது தேவை இல்லாதது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்திருக்கிறார்.
யூ டியூப் சேனல் ஒன்றுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ராமர் பட எரிப்பு, விநாயகர் சிலை உடைப்பு போன்றவை தொடக்க காலத்தில் தேவைப்பட்டன.
இதுதான் தமிழகம்! காஞ்சி சங்கர மடம் எதிரே பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அர்ச்சகர்!
தேவை இல்லை கலகப் போராட்டம்
அப்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பெரியார். அதன் வழியாக கடவுளுக்கு சக்தி இல்லை என்பதை காட்டினார் பெரியார். அது மக்கள் மனதை சென்றுசேர்ந்துவிட்டது. இப்போது போய் அப்படிப்பட்ட போராட்டங்கள் தேவை இல்லை. கலகப் போராட்டங்கள் இப்போது தேவை இல்லை.
தேவை இல்லை பிள்ளையார் சிலை உடைப்பு
பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற போராட்டங்கள் தேவைப்படாது. தேவையில்லை. தேவையற்றதாக இருக்கிறது. அன்று ராமாயணம் பலவழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது; விநாயகரை கொண்டுவர முயற்சித்தார்கள். அதனால் அப்போது அந்த போராட்டங்கள் தேவையாக இருந்தது.
முருகனிடம் போன பாஜக
இப்போது ராமர், விநாயகரிடம் இருந்து அவர்களே முருகனுக்கு வந்துவிட்டார்கள். ஸ்கந்தன் தமிழ்க் கடவுள் அல்ல.. முருகன் தமிழ்க் கடவுள் என்று குழப்பியடித்து அவர்கள் மீண்டும் வரவேண்டியது இருக்கிறது. அதனால்தான் இப்ப அந்த போராட்டங்கள் தேவை இல்லை என நினைக்கிறோம்.
ராமாயண ஆபாசங்கள் தேவை இல்லை
ராமாயண ஆபாசங்களை இப்ப பேசுவது எல்லாம் தேவை இல்லாதது. சாலைகளை செப்பனிட்டு பாறைகளை உடைத்த பின்னர் மீண்டும் இருக்கிற பாறைகளை உடைப்பீர்கள் என்றால் தேவை இல்லை. சாலை அமைத்திருக்கிறோம்.. அதில் வேகமாக மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.