செயற்கை கை, கால் பெற இனி கட்டணமில்லை.. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்
செயற்கை கை, கால் பெறுவதற்கு இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை கே.கே. நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை கை, கால் பெறுபவர்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இம்மாதம் முதல் ரூ.1,500ஆக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்று. மருத்துவ சேவை, சமூக மற்றும் தொழில் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கடப்பாரை நான் எடுத்து வரவா? நீ என்ன வேலை செய்ற? அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மஸ்தான்!
புதிய கட்டடம்
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ஒரு அங்கம் இம்மருத்துவமனை விரிவான இடவசதி கருதியும், மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வு தொடர்பான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலும் சென்னை கே.கே. நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மாற்றப்பட்டது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ. 28 கோடி செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை உபகரணங்கள், அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,500ஆக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்க அறிவித்தார். இந்த மாதம் முதல் அவை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனால் 21 வகையான 4 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடுமையான பாதிப்புள்ள 2 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய உள்ளனர்.
கட்டணமில்லை
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பெறும்போது குறைந்தபட்ச கட்டணம் கூட இல்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளார். இனி கே.கே.நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் செயற்கை கை, கால் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.