சவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா?..வேட்பாளர்களுக்கு துரைமுருகன் கேள்வி!
சென்னை: என் மகன் கதிர் ஆனந்த் போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திமுக சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகன் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று வேலூரில் துரைமுருகன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்!
ஆட்சி மாறும்
துரைமுருகன் தனது பேச்சில், அதிமுகவில் 30 எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் இடைத்தேர்தல் முடியட்டும். எல்லாம் சரியாக நடக்கும். மு.க ஸ்டாலின்தான் முதல்வராக பதவி ஏற்பார். நானே ஆளுநரிடம் ஸ்டாலினை அழைத்து சென்று பதவி பிரமாணம் செய்ய வைப்பேன்.
அரசியல் தெரியும்
என்னுடைய மகனுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாகவே அரசியல் தெரியும் . நாடாளுமன்றத்தில் பேச ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் தெரியாமல் நாடாளுமன்றம் செல்வதால் பயனே இல்லை. அதற்கு வீட்டில் சும்மாவே இருக்கலாம்.
ஆங்கிலம் முக்கியம்
இப்போதெல்லாம் நம் எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் மகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். என் மகன் என்பதற்காக சொல்ல வரவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் மிக சிறப்பாக ஆங்கிலத்தில் பேச போகிறான்.
சவால்
வேண்டும் என்றால் சவால் வைத்துக் கொள்ளலாம். எல்லா வேட்பாளர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். ஒரு அரை மணி நேரம் பேச சொல்லலாம். யார் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார் என்று பார்க்கலாம். என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச அவர்களால் முடியுமா என்று பார்க்கலாம், என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.