சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் ஏன்.. முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு பேச்சு
சென்னை: சென்னையில் அரசின் வழிகாட்டுதல்களை யாரும் பின்பற்றவில்லை என்று வேதனை தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அதிகாரிகள் கொரோனா பரவலை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை முதல்வரிடம் விவரித்தனர். கொரோனா எங்கு அதிகம் பரவி உள்ளது. அதற்கான காரணங்களையும் கூறினர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்றை தடுப்பது குறித்தும், குடிசைப்பகுதிகளில் அதிகம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பால் கொடுத்த நர்ஸ்.. "நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்".. உருக வைக்கும் சம்பவம்
யாரும் பின்பற்றவில்லை
இதன்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் அரசின் வழிகாட்டுதல்களை யாரும் பின்பற்றவில்லை. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
4000 பேருக்கு பரிசோதனை
சென்னையில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் நோய் தொற்று அதிகம் உள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அண்டை மாநிலங்ளைவிட அதிக அளவு தமிழகத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் தினமும் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. நாள்தோறும் 13000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா சிறப்பு முகாம்
சென்னையில் நோய் தொற்றை தடுக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 32 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். அதிகம் பாதித்துள்ள முதியோர்களை காப்பாற்றுவதற்காக 300 தன்னார்வலர் பணியாளர்களை தொடர்பு கொண்டு, நோய் தொற்று இருப்பின் உடனடியாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா நோய் அதிகமாக முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொற்றா நோய் பாதித்தவர்கள்
இரத்தக் கொதிப்பு, இதய நோய் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய் பாதிக்கப்பட்ட சுமார் 3.5லட்சம் பொதுமக்களை தொடர்ந்து கண்காணித்தோம். அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவை கிடைக்க 1300 செவிலியர்கள் மற்றும் 450 அங்கன்வாடி பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று நோயுடன் தொற்றா நோய் உள்ளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பபட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்றைக்கு ஏழை எளிய மக்கள் முககவசம் அணியாமல் இருக்கிறார்கள். அவர்கள் முககவசம் அணிய 1.5 கோடி முககவசங்கள் சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. கபசுர குடிநீரும் சென்னை மாநகரம் முழுவதும் வழங்கப்படுகிறது.
இதுதான் முக்கிய மருந்து
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி, தேவையான சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா அதிகம் பாதித்த சென்னையில், பொதுமக்கள் காய்கறி வாங்க செல்கிறார்கள், கறிக்கடைக்கு செல்கிறார்கள். மீன்மார்க்கெட் செல்கிறார்கள். மளிகை கடைக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வீட்டுக்கு வந்த உடன் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டின் கழிப்பறைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. இதை எல்லாம் கடைபிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். இதுதான் முக்கியமான மருந்து.
வளர்ந்த நாடுகள்
இன்றைக்கு வளர்ந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து. இப்போது குறைந்து மீண்டு கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னவற்றை அந்த நாடுகளில் மக்கள் கடைபிடித்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அரசுகள் சொன்ன வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றியிருக்கிறார்கள். இந்த தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறர்கள். அதையே நாமும கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த நோயை ஒழிக்க முடியாது. கட்டுப்படுத்தவே முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதைத்தான் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள். அதைத்தான் அரசும் வழியுறுத்திக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகர மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.