"ப்ளீஸ் ப்ளீஸ்.. கெஞ்சி கேட்கிறேன்.. தயவு செய்து யாரும் வராதீங்க".. திருமாவளவன் உருக்கம்!
யாரும் அங்கனூர் வர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு திருமா கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: "ப்ளீஸ்.. ப்ளீஸ்... கெஞ்சி கேட்கிறேன்.. என்னை தேடி யாரும் அங்கனூர் வர வேண்டாம்" என்று தொல்.திருமாவளவன் தன் தொண்டர்களுக்கு உருக்கமான ஒரு வேண்டுகோளை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனின் அக்காள் பானுமதி தொற்று காரணமாக சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.. இதனால் திருமாவளவனுக்கு ஆறுதல் சொல்ல கட்சி தொண்டர்கள் தினமும் அங்கனூருக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் தொண்டர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட திருமாவளவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கேட்டுக் கொண்டதாவது:
அடுத்த வீட்டில் அவமானப்பட்டு டிவி பார்த்த வலி தெரியுமா.. கண்ணீர் துடைத்தது கருணாநிதிதானே!
சிறுத்தைகளே
''என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே.. வணக்கம். என்னை ஆற்றுப்படுத்தும் நன்னோக்கில் என்னைத்தேடி அங்கனூருக்கு வருவது சரிதான். ஆனால், அது முற்றிலும் ஏற்புடையது அல்ல. பல மாவட்டங்களைக் கடந்துவந்து என்னைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வாறு நம்மைத் தீங்குசூழும் என்பதை நம்மால் ஊகிக்க இயலாது.
சென்னை வீடு
''கொரோனா எவ்வளவு கொடியது என்பதை அக்காவைப் பலி கொடுத்ததிலிருந்து மேலும் கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். அவர் சென்னையில் வீட்டிலேயே தான் இருந்தார். எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரைத் தேடிவந்து ஓரிருவர் சந்தித்துள்ளனர். உரிய பாதுகாப்புடன்தான் அந்த சந்திப்புகள் நடந்துள்ளன. ஓரிரு முறை வீட்டுக்கருகேயுள்ள பெட்டிக்கடைக்கு போனதாக சொன்னார். கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட எச்சரிக்கையாக செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார். ஆனாலும், அக்காவை எப்படியோ கொரோனா தொற்றிக்கொண்டதே!
உணர வேண்டாமா?
''அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்துவிட்டதே! 'பெற்றவயிறு பற்றி எரியுதே' என்று சொல்லிச்சொல்லி, அடிவயிற்றில் அடித்துக்கொண்டு அம்மா மூன்றுநாட்களாக இடையறாமல் கதறும்நிலை உருவாகிவிட்டதே. சிலநேரங்களில் அவர் பித்துப் பிடித்ததைப்போல நிலைகுலைந்து தடுமாறும்நிலை ஏற்பட்டுள்ளதே.கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணரவேண்டாமா?''
அறிகுறிகள்
யாரிடமிருந்து யாருக்கு இது தொற்றும் என்பதை எவராலும் கணித்திட இயலாதே. அறிகுறி காட்டாமலேயே பதுங்கியிருந்து தொற்றிக்கொள்ளும் கொடிய உயிர்க்கொல்லி அல்லவா இந்தக் கொரோனா? மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் இனக்கொலைக் கும்பல் அல்லவா இந்தக் கொரோனா கூட்டம்? ''இனியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? கொரோனா கூட்டத்தின் உயிர்க்குடிக்கும் பயங்கரத்திலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டாமா?
உறவினர்கள்
''கொரோனா தொற்றிக்கொண்டால் அதனை அழித்தொழிக்கும் வலிமை எதற்குமே இல்லை; யாருக்குமே இல்லை. அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி,மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான் பார்க்கமுடியும். என்ன குரூரம் இது? நாம் சடலமான பிறகு செத்தநாயை தூக்கி எறிவதைப்போல அல்லவா புதைகுழியில் எறியப்படுவோம்.
|
ப்ளீஸ்.. ப்ளீஸ்..
''தோழர்களே, தயவுகூர்ந்து இதை நெஞ்சிலே இருத்துங்கள். எனக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்க வேண்டாம். உங்களால் எனக்கு ஏதும் ஏற்பட்டுவிடும் என்பதல்ல என் அச்சம். பயணத்தின் வழியில் கொரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும். மென்னியை இறுக்கும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது யார்க் கையிலும் இல்லை. கொரோனா மிக பயங்கரமான கொடுந்தீங்கு. ''எனவே, கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை ஆற்றுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தேடிவர வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்காகவே இறைஞ்சுகிறேன். அங்கனூர் வரவேண்டாம். ப்ளீஸ்...ப்ளீஸ்.. '' என அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.