லாக்டவுன் இப்டியே தொடர்ந்தா நீங்க இப்டித்தான் ஆவீங்க பாஸ்... விஜய் ஸ்டைல்ல ஒரு குட்டி ஸ்டோரி!
லாக் டவுனில் முடி வெட்ட முடியாமல் பல ஆண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அது பற்றி ஒரு குட்டி ஸ்டோரியோடு மெயின் ஸ்டோரியும் உங்களுக்காக...
சென்னை: லாக் டவுனால் நம் தலைக்கு மேல் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும், அதில் முதன்மையானதும், முக்கியமானதும் ஒன்று இருக்கிறது. அது தான் முடி வெட்டுவது.
ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு செய்து வந்தாலும், இன்னமும் சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தடை நீடித்து தான் வருகிறது. இதனால் மக்கள் எம்மாதிரியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அனைவருமே அனுபவப்பூர்வமாக அதை அனுபவித்து வருகிறோம்.
மெயின் ஸ்டோரிக்குள் போவதற்கு முன்னால், விஜய் ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரி உங்களுக்காக...
இன்று மாலை 4 மணிக்கு.. நிர்மலா சீதாராமன் மீண்டும் பிரஸ் மீட்.. முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
தப்பிச் சென்ற ஆடு
நியூசிலாந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு பண்ணையொன்றில் வளர்க்கப்பட்டு வந்த செம்மறி ஆடு ஒன்று, அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒரு நாள் மலைப்பகுதிக்கு தப்பிச் சென்று விட்டது. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின் தான் அதனை மீண்டும் உரிமையாளர் கண்டுபிடித்தார்.
கிலோகணக்கில் ரோமம்
பண்ணையில் உள்ள மற்ற செம்மறி ஆடுகளுக்கு ஆண்டுதோறும் அதன் உரிமையாளர் ரோமம் கத்தரித்து விடுவார். ஆனால், மலைப்பகுதியில் சுற்றித் திரிந்து, குகைகளில் தங்கி வாழ்க்கை நடத்தியதால் அந்த செம்மறி ஆட்டின் உடம்பில் சுமார் 60 பவுண்ட் எடையுள்ள ரோமம் வளர்ந்து விட்டது. கிலோ கணக்கில் சொல்வதென்றால் சுமார் 27 கிலோ.
அரண்
உடல் முழுவதும் அதிகப்படியான ரோமம் வளர்ந்து விட்டதால், ஒருபுறம் நடக்க அந்த ஆடு சிரமப்பட்டாலும், மறுபுறம் நரி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு உணவாகி விடாமல் இருக்க அந்த ரோமமே அதுக்கு பாதுகாப்பு அரணாகி விட்டது. தப்பித் தவறி விலங்குகளிடம் சிக்கிக் கொண்டால் கூட, அந்த ஆட்டை அவைகளால் கடிக்க முடியவில்லை.
வீட்டம்மாக்களின் உதவி
சரி, இப்போ நாம் மெயின் ஸ்டோரிக்கு வருவோம். ஊரடங்கால் சலூன் கடைகள் மூடி இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் இந்த ஆடு மாதிரி தான் தலை நிறைய முடியோடும், முகம் நிறைய தாடியோடும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளனர். வேறு வழியே இல்லாமல் பல வீடுகளில் வீட்டம்மாக்களே கணவருக்கும், குழந்தைகளுக்கும் முடி வெட்டி விட்ட கதைகளும் நடந்து வருகிறது.
பரதேசி அதர்வா லுக்
சம்பந்தப்பட்டவர்களின் அதிர்ஷ்டத்தையும், திறமையையும் பொறுத்து, வீட்டம்மாக்களின் கைவண்ணத்தில் பலர் பரதேசி அதர்வா லுக்கிலும், சிலர் ராம்கி போல் ஸ்டைலாகவும் வலம் வருகின்றனர். ஆனால் மனைவி மீது கொஞ்சமும் நம்பிக்கை வைக்காமல் இருப்பவர்கள் மேலே சொன்ன கதையில் வரும் ஆடுகள் போல் தான் முடி வளர்த்து வருகின்றனர்.
தலைக்கும் மாஸ்க்
ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பல அலுவலகங்களில் முடி வெட்டாமல், முகத்திலும் மாஸ்க் அணிந்து வரும் ஊழியர்களை முதலாளிகளுக்கும், உயரதிகாரிகளுக்கும் அடையாளமே தெரிவதில்லையாம். பரதேசி ஸ்டைலில் முடி வெட்டிக் கொண்டவர்களோ, முகத்தோடு தலைக்கும் சேர்த்து மாஸ்க், அதாங்க தொப்பி, ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு செல்கிறார்கள்.
ஓடவும் முடியலை.. ஒளியவும் முடியல..
முடி வளர்த்து தோற்றத்தில் இந்த ஆடு மாதிரி ஆனாலும், அந்த ஆடு கொடுத்து வைத்த மாதிரி நம்ம ஆளுங்களுக்கு அமையவில்லை பாஸ். மற்ற விலங்குகளிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடி அந்த ஆட்டிற்கு உதவியாக இருந்தது. ஆனால், நம்மாளுகளுக்கோ மனைவி மற்றும் குழந்தைகளிடம் இருந்து ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் இழுத்து பிடித்து கும்கும்மென கும்மாங்குத்து கொடுக்கத்தான் உதவி செய்து வருகிறது இந்த முடி. அதாடு வெயிலும் சேர்ந்து கொள்ள பாவம் பாஸ் இந்த ஆண்கள்...