இனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ!
சென்னை: இந்த முறை லோக்சபா தேர்தல், மதிமுகவுக்கு மிகவும் வெற்றிகரமான ஒன்றாக மாறப்போகிறது.
திமுக கூட்டணியில் ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளை பெற்றுள்ளது மதிமுக. மதிமுகவுடன் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்த, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தலா இரு லோக்சபா தொகுதிகளை பெற்றுள்ளன.
அதேநேரம் மதிமுகவுக்கு மட்டும் வித்தியாசமான ஆஃபர் கிடைத்துள்ளது.
1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக - மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது!
உதய சூரியன்
மூன்று தொகுதிகளுக்கும் குறைவில்லாமல் தரவேண்டும் என்றுதான் வைகோ தரப்பில் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி கொடுத்தால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாரா என்று ஸ்டாலின் கேட்டதும், வைகோ அதிர்ந்து போய் விட்டாராம். திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் மதிமுக. அப்படியிருக்கும்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, பதிலாக கட்சியை கலைத்து விடலாம் என்று மதிமுக நிர்வாகிகள் வைகோவிடம் எகிறி உள்ளனர்.
ராஜ்யசபா கொடுங்கள்
"மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டி இருக்கும்" என்று வைகோ மெல்ல ஸ்டாலின் காதில் சொல்ல.. அப்படியானால் ஒரு சீட்டுக்கு மேல் தர முடியாது என்று உறுதியாக கூறி விட்டது திமுக. அதற்கு பதிலாக தான் வேறு ஒரு ஆஃபரை கொண்டு வந்தார் வைகோ. ஒரு தொகுதி என்றாலும் பெற்றுக் கொள்கிறோம், ஆனால் ராஜ்யசபா தொகுதி ஒன்றில் எங்களை தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். 21 சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று புது கண்டிஷன் போட்டுள்ளார்.
எம்பியாகும் வைகோ
இந்த டீலிங் திமுகவுக்கும் ஓகே என்று தான் பட்டது. திமுக தரப்பில் பிரச்சார பீரங்கிகள் அதிகம் இல்லாத நிலையில், வைகோவின் சேவை, திமுக கூட்டணிக்கு தேவை என்ற முடிவில் இருந்த ஸ்டாலின், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். எனவே மதிமுக போட்டியிடக்கூடிய ஒரு தொகுதியில் அது தோற்றாலும் ஜெயித்தாலும் ராஜ்யசபா மூலமாக வைகோ எம்பி ஆகப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது. வைகோதான் ராஜ்யசபா எம்பி ஆகப் போகிறார் என்றும், லோக்சபா தேர்தலில் தனது கட்சியில் உள்ள சீனியர் ஒருவரை போட்டியிட வைக்கப் போகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றவாதி வைகோ
திமுக சார்பில் 1978ல் முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினரானார் வைகோ. 1984ல் இரண்டாவது முறை, 1990ல் 3வது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார் வைகோ. இதன்பிறகு, 1994ல் மதிமுக என்ற கட்சியை துவங்கினார். 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில், மதிமுக சார்பில் லோக்சபா உறுப்பினராகினார். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற நற்பெயரை சம்பாதித்தார். ஆனால் அதன்பிறகு, வைகோ நாடாளுமன்றத்தில் நுழையும் கனவு நனவாகாமல் இருந்தது. இப்போது மீண்டும் திமுக மூலமாக, ராஜ்யசபாவிற்குள் காலடி எடுத்து வைக்க உள்ளார். தமிழகம் நலன் சார்ந்த விவகாரங்களில் இனி நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் என நம்பலாம்.