இந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்
சென்னை: திராவிட மண்ணில் வேறு எந்த கட்சியை விதைத்தாலும் மலராது, முளைக்காது என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேனி, வேலூர் தொகுதியை தவிர 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. மக்களவைத் தேர்தலில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 3 வது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களுடன் அக்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, பேரணியாக வந்து, அண்ணா நினைவிடத்திலும், பின்னர், கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி?
தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், கி.வீரமணி, திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய வடிவிலான பெரியார் சிலையையும், புத்தகத்தையும், திராவிடக் கட்சி தலைவர் கி.வீரமணி வழங்கினார். அதே போல், திமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரியாரின் நூல்களை பரிசாக வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மாறுப்பட்ட ஒன்று தமிழகம். பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும், முளைக்காது, மலராது என்று கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்வதன் அடையாளமே 38 (புதுச்சேரி உட்பட) தொகுதிகளில் திமுக பெற்ற வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.