வாகன ஓட்டிகளே உஷார்! நோ பார்க்கிங்கில் இனி வண்டியை நிறுத்தினால்.. அபராதம் கிடுகிடு உயர்வு
சென்னை: தமிழகத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் இனி உங்கள் வண்டியை நிறுத்தினால் இது வரை கொடுத்து வந்த தொகையைவிட மிக அதிகமான தொகையை அபராதமாக கட்ட வேண்டும்.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தமிழக போக்குவரத்து காவல்துறை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட முக்கிய நகரங்களில் சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதித்துள்ளது.
அதையும் மீறி இருசக்கர வாகனங்களையோ நான்கு சக்கர வாகனங்களையோ அந்த பகுதியில் நிறுத்தினால் போக்குவரத்து போலீசார், தங்களது இழுவை வண்டியை கொண்டுவந்து இழுத்து வாகனங்களை தூக்கி சென்றுவிடுகிறார்கள். சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இழுவை வண்டியோடு போக்குவரத்து போலீசார் வாகனங்களை தூக்கி செல்வததை அடிக்கடி பார்த்திருப்போம்.
இனி 450 ரூபாய்
இவ்வாறு வாகனங்களை இழுவை வண்டியில் தூக்கி செல்வதற்கான கட்டணத்தை தமிழக காவல்துறை அதிகரித்துள்ளது. எனவே இதன் காரணமாக இனி நோ பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தினால், முன்பு 325 ரூபாய் கட்டியிருந்தால் இனி 450 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இதேபோல் இருசக்கர வாகனத்தை நோ பார்க்கிங்கில் நிறுத்தினால் இதுவரை ரூ.160 கட்டியிருப்பீர்கள் இனி 225 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும்.
உதவியாளர்கள்
ஏனெனில் வாகனங்களை இழுவை வண்டியில் தூக்கி வைக்கும் உதவியாளர்களுக்கான தொகையை 10 முதல் 25 சதவீதம் வரை வாகனங்கள் வாரியாக அரசு உயர்த்தியுள்ளது. வாகனங்களை இழுவை வண்டியில் தூக்கி வைக்கும் வேலையை செய்தவற்கு உதவியாளர்கள் கிடைப்பது கடினமாக இருக்கும் காரணத்தால் அபராதத்தைக் காவல்துறை உயர்த்தி உள்ளது.
சென்னையில் தான்
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சென்னை காவல்துறையினர் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சரமாரியாக தூக்கி சென்று வருகிறார்கள். அத்துடன் பிஸியான வீதிகள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தியிருந்தாலும் காவல்துறையினர் வாகனங்களை இழுத்துச் செல்கிறார்கள். எனவே இனி நோ பார்க்கிங் என்பது காஸ்ட்லியாகி விடும்.
40000 ஆக உயர்வு
சென்னையில், ஒவ்வொரு மாதமும் 25,000 க்கும் குறைவான வாகனங்கள் அங்கீகரிக்கப்படாத இடங்களில் நிறுத்தியதற்காக தூக்கி செல்லப்படுகின்றன இருப்பினும், பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்துள்ளது என்று செய்தி அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆண்டுதோறும், சுமார் 3 லட்சம் வாகனங்கள் சென்னையில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் நிறுத்துவதற்கு அபராதம் விதிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட 1700 விபத்துக்களில் 320 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.