தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை நுழைய விடமாட்டோம்.. ஆரம்பமே அதிரடி.. கலக்கும் அமைச்சர் பொன்முடி
சென்னை: புதிய கல்விக் கொள்கை பற்றிய கேள்விக்கு மழுப்பலான பதிலைத் தராமல், தமிழகத்தில் அதற்கு இடமில்லை எனக் கூறி நேரடியாக ஆக்ஷன் மோடிற்கு சென்றுவிட்டார் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகக் கடந்த மே 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தமிழகம் இதுவரை காணாத ஒரு சிறப்பான ஆட்சியை தர வேண்டும் என்பது ஸ்டாலின் விருப்பமாக உள்ளது.
திருப்பதி லட்டுக்கு நெய் விற்ற பணம் கோவிந்தா - மதுரை ஆவின் அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்
இதன் காரணமாக அவர் தனது அமைச்சரவையை மிகக் கவனமாகவே தேர்வு செய்துள்ளார். முக்கிய துறைகளாக கருதப்படும் சுகாதாரத் துறை, உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை, நிதித் துறை ஆகியவற்றுக்குச் சரியான நபர்களையே ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
உயர்கல்வி துறைக்கு பொன்முடி
குறிப்பாக, இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பதவி அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டுள்ள பொன்முடிக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 59 ஆயிரம் வாக்குக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றவர் தான் பொன்முடி.
சீனியர் அமைச்சர்
ஸ்டாலினின் அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களுக்கும் துறைகள் மாறியபோதும், இவருக்கு மாறாமல் உயர் கல்வித் துறையே ஒதுக்கப்பட்டது. பொன்முடி கடந்த 2006-11 கருணாநிதி அமைச்சரவையிலும் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். மேலும், இவர் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த அனுபவம் பெற்றவர். மத்திய அரசு நீட், புதிய கல்விக் கொள்கை எனப் பல மாற்றங்களைச் செய்ய முயலும்போது அதையெல்லாம் சிறப்பாகச் சமாளிக்கும் ஆளாக பொன்முடியே இருப்பார் என்பது பலரது கருத்தாக இருந்தது.
அதிரடி ஆக்ஷன்
அமைச்சராகப் பதவியேற்று இன்னும் ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிவிட்டார் பொன்முடி. ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கல்லூரிகள் ஆன்லைனில் நடந்து வரும் நிலையில், தேர்வுகளை நடத்துவது பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் வாய்ப்பில்லை
ஆனால், இதைவிட புதிய கல்விக் கொள்கை பற்றி அவரது உறுதியான பேச்சு தான் தற்போது இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. புதிய கல்விக் கொள்கை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என்றும் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிகள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக இதை நவீன குலக் கல்வித் திட்டம் என்றும் விமர்சித்திருந்தது. இருப்பினும், இந்தப் புதிய கல்விக் கொள்கையை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்பதில் பாஜக அரசு மிக உறுதியாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இது சற்றே தாமதம் ஆகியுள்ளது.
மழுப்பல் இல்லை நேரடி பதில்
எதிர்க்கட்சியாக இருந்த போது, புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துவிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர். புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு மழுப்பலான பதிலைத் தராமல், தமிழகத்தில் அதற்கு இடமில்லை எனக் கூறி நேரடியாக ஆக்ஷன் மோடிற்கு சென்றுவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சு தான் இப்போது திமுக தொண்டர்கள் மத்தியில் டிரெண்டிங்!