முக்கியமான பொறுப்புல இருந்தா.. சமூகத்தில் சில அழுத்தம் வருவது இயல்புதானே... சமாளித்த சூரப்பா
சென்னை: தமிழக அரசிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் வரவில்லை என சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி துவங்கிய 225ஆம் ஆண்டு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் சூரப்பாவிடம், அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்த புகார் குறித்து கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சூரப்பா, "முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு சமூக ரீதியாகவும் மற்ற சில இடங்களில் இருந்தும் அழுத்தம் வருவது இயல்பு தான். எனக்கு தேவையான எல்லா ஒத்துழைப்பும் அரசிடம் இருந்து கிடைக்கிறது . தனிப்பட்ட முறையில் அரசிடம் இருந்து எந்த அழுத்தம் எதுவும் இல்லை.
92 கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் எந்ததெந்த கல்லூரிகள் என்று என்பதை சொன்னால். சமூகத்தில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கும் என்பதாலேயே, கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" இவ்வாறு கூறினார்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார்.