விஜயகாந்த்தை ஏன் சந்தித்தேன்? அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்!
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இன்று காலை 11.30 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். சுமார் 20 நிமிடங்கள், விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தாருடன் ரஜினிகாந்த்துடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
விளக்கம் அளித்த ரஜினிகாந்த்
விஜயகாந்த்தின் கரங்களை பிடித்தபடி ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு கிளம்பவில்லை. நேராக வெளியே வந்து, திடீரென செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ரஜினிகாந்த் தனது சந்திப்பின் நோக்கம் என்ன என்பது குறித்து, விளக்கம் அளித்தார்.
அமெரிக்காவில் முயற்சி
ரஜினிகாந்த் கூறியதாவது: அமெரிக்காவில் இருக்கும் போதே விஜயகாந்தை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அங்கு சந்திக்க முடியவில்லை. ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது என்னை பார்க்க வந்த முதல் ஆள் கேப்டன் தான்.
முதல் நபர் கேப்டன்
சிங்கப்பூரிலிருந்து நான் சிகிச்சை முடித்து திரும்பியதும் முதலில் தொலைபேசியில் அழைத்து, எனது உடல்நிலையை பார்த்துக் கொள்ளுமாறு கூறியதும் விஜயகாந்தான். இப்போது சிகிச்சை முடிந்து, அமெரிக்காவிலிருந்து நல்ல ஆரோக்கியத்துடன் வந்துள்ளார். அவரை இப்படி பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
கேப்டன் ஒரு நல்ல மனிதர். அவர் எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
என்ன திட்டம்
உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் அப்போது ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பினர். "என்னுடைய அரசியல் நிலை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்போது பேசத் தயாராக இல்லை" இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தப்போவதில்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.