தமிழகத்தில் மின்வெட்டா? பிற மாநிலங்களுக்கே மின்சப்ளை செய்கிறோம்..அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை; உபரியாக மின்உற்பத்தியானது பிற மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல்தான் தேசிய மாடல் என்ற தலைப்பில் பயிரலங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:
திராவிடம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. திராவிடம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனத்தை நம்மீது திணித்தவர்களிடம் இருந்து நம்மை மீட்க வந்த ஆயுதம். மனிதனை மனிதனாக நடத்துவதுதான் திராவிட மாடல். சுயமரியாதைதான் திராவிட மாடல்.
சிலபேர் குஜராத் மாடல் என்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளதால் அவை மூடப்பட்டு வருகின்றன. ஆனால் திராவிட மாடலில் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தமிழகத்தில் எந்த ஒரு மின்நுகர்வோருக்கும் மின்வெட்டு இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் மின்தடை இருந்தது. மத்திய தொகுப்பில் இருந்து வழங்கக்கூடிய மின்சாரம் தடைபட்டதால்தான் அந்த மின்தடை ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக 3 நாட்களில் அது சரிசெய்யப்பட்டு தற்போது மின்சாரத்தில் உபரி ஏற்பட்டு பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய அளவில் நாம் உள்ளோம். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை அதுதான் திராவிட மாடல்.
நாம் ஒரு ரூபாய் வரி செலுத்தினோம் என்றால் நமக்கு மத்திய அரசு 35 பைசாதான் திருப்பி கொடுக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், நமது மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியை பார்த்து பாராட்டி வருகின்றனர். இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.