கூட்டணியில் பிரச்சினையில்லை... விஜயகாந்த் ஆணையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் - பிரேமலதா
அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள பிரேமலதா, யாருக்கு எந்த தொகுதி எத்தனை இடங்கள் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று சொன்னார். கடவுளின் ஆசியுடன் விஜயகாந்த் ஆணையிட்டால் நிச்சயமாக வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video
தேமுதிகவினர் பயன்படுத்தும் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 21 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த், கொடி அறிமுக நாள் விழாவை சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் நடத்துவார். வீட்டிற்கு வெளியே உள்ள கொடிக் கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்து, கூடியிருக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குவார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக கொடி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு கொடி நாளில் பங்கேற்ற விஜயகாந்த் பிரச்சார வேனில் இருந்தவாறே கொடியை ஏற்றி வைத்தார்.
பிரச்சார வேனில் இருந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என்று முழக்கமிட்டனர். அப்போது பேசிய பிரேமலதா, மாநிலம் முழுவதும் கேப்டன் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறினார். தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். தலைமை வகிக்கும் அதிமுகவிடம் கேளுங்கள் என்றார். கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை என்றும் தெரிவித்தார்.
தேமுதிக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும் என்று கூறிய பிரேமலதா, தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வார்கள் என்றார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, தொண்டர்கள் விரும்பினால் கடவுளின் ஆசியோடும், விஜயகாந்த் ஆணையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். இதுவரை யாருக்கு எந்த தொகுதி என்று முடிவாகவில்லை என்றும் கூறினார்.
தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று கூறினார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகவே இருக்கிறது அதற்காக வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறிய பிரேமலதா. இன்னும் நிறைய இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள் என்றும் எங்களின் கொள்கைகளை அறிவித்து விட்டுதான் பிரச்சாரத்திற்கே வருவோம் என்றார்.