தமிழகம் முழுவதும் ரூ.3.07 கோடி பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சென்னை: கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.3.07 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் ரூ.9.29 லட்சம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று, உதகையில் ஏ.டி.எம். இயந்திரத்துக்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் ரூ.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையாக ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தேர்தல் பறக்கும்படையினரால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் பள்ளி மேலாளர் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பள்ளி கட்டணமாக வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா
மேலும், விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இனி வரும் நாட்களில் இன்னும் பல கோடி ரூபாய் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.