அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Recommended Video
சென்னை: அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்தி வரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பூஜை செய்யப்படும். பின்னர் மீண்டும் அத்தி வரதர் சிலை நீருக்கடியில் வைக்கப்படும்.
அந்த வகையில், ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 23வது நாளான நேற்றும், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்தநிலையில், ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பக்தர்களுக்கு தேவையான எந்த வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளார். தரிசன நேரத்தை குறைப்பதாக கிளம்பிய வதந்தி காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று கூறினார். மேலும், பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும். அத்திவரதர் தரிசனத்திற்காக இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.