அதி தீவிர புயலான நிவர்.. சூறைக் காற்றுடன்.. சென்னையில் மீண்டும் வெளுத்தெடுக்கும் கன மழை!
சென்னை: சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சில மணி நேரங்களாக சில பகுதிகளில் மழையில்லாதிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. கடந்த 6 மணி நேரத்தில் 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் எங்கும் நகராமல் அப்படியே உள்ளது.
இதனால் நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் தற்போது புயல் ஒரே இடத்தில் நிற்பதால் காற்றின் வேகமும் நின்றுவிட்டது. வானமும் தெளிவாகிவிட்டது.
Cyclone Nivar: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழை- வானிலை மையம்
ரிலாக்ஸ்
புயல் ரெஸ்ட் எடுக்கும் வரை சென்னை மக்களும் மழை இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தார்கள். அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.
கனமழை
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. சுமார் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த புயல் மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியதால் சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழை
பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம், முகப்பேர், அமைந்தகரை, அம்பத்தூர், அண்ணாநகர், கிண்டி, அசோக் நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காற்றுடன் கனமழை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.
கும்மிருட்டு
சென்னையில் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையே கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.