அட அக்ரிமென்ட்டே போடலப்பா.. தேமுதிகவுக்கு, ஜெயக்குமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. அடுத்து என்ன?
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் எம்பி பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் திமுக எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக தெரிவித்துவிட்டார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு சீட்டுகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு சீட்டையாவது, வெற்றி பெற வேண்டும் என்று தேமுதிக துடியாய் துடிக்கிறது.
இதுதொடர்பாக, சென்னையில் நேற்று முதல்வர் இல்லத்துக்கு நேரில் சென்று தேமுதிகவின் சுதீஷ் ஆலோசனை நடத்தியிருந்தார்.
ராஜ்யசபா சீட் இல்லை.. அதிமுக அதிரடி முடிவு..அதிர்ச்சியில் தேமுதிக.. விஜயகாந்த் வீட்டில் பஞ்சாயத்து!
தேமுதிக முயற்சி
பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு, ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள தங்கள் கட்சிக்கும் ஒரு சீட்டு பெற்று விட வேண்டும் என்று கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்.
அக்ரிமென்ட் போடவில்லை
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாமக மற்றும் தேமுதிக உடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அப்போது பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதுபோன்ற எந்த ஒரு ஒப்பந்தமும் தேமுதிகவுடன் போடப்படவில்லை என்று தடாலடியாக தெரிவித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து கூட்டணி அமைத்து கொண்டு தேர்தலை சந்தித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார் ஜெயக்குமார்.
பாமக முக்கியம்
ரசாயனம் கலந்த மீன்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கவும் ஜெயக்குமார் தவறவில்லை. வட தமிழகத்தில் பாமகவிடம் உள்ள வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொள்வதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதேநேரம் விஜயகாந்த் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லாத காரணத்தால் தேமுதிகவை கழட்டி விட்டாலும் பரவாயில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்து என்ன?
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இதைச் செய்து விடவேண்டும், அல்லது அதிகமான சீட்டுகளை தேமுதிக கேட்டு அடம்பிடிக்கும் என்று அதிமுகவில் பல தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. சீட் கிடைக்காத விரக்தியில் தேமுதிக அடுத்து என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.