சென்னையில் வெயிலை காணோம்.. 'தண்ணீர் தண்ணீர்' சரிதா போல மழைக்காக காத்திருக்கும் மக்கள்!
சென்னை: சென்னை நகர் முழுவதும் ஒரு மாதிரியான அமைதி நிலவி வருகிறது.. அதாவது இது வானிலை அமைதி. வானம் அப்படி ஒரு மயான அமைதியுடன் காட்சி தருகிறது.
காலையிலிருந்தே வெயிலைக் காணோம். மரம் செடி எதுவும் அசையக் கூட இல்லை. காற்று வீசவில்லை. மழை வருமா என்ற அறிகுறியையும் காணோம். ஒரு மாதிரியான வித்தியாசமான வானிலையை சென்னை கண்டு வருகிறது.
காலையிலிருந்து சுத்தமாக வெயிலே இல்லை. கமுக்கமாக இருக்கிறது. புழுக்கமாகவும் இருக்கிறது. காற்று கூட வீசாமல் வானம் இப்படி மெளனம் காப்பது சென்னை வாசிகளிடையே கலவையான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை
கடும் வறட்சி
சென்னையைப் பொறுத்தவரை இப்போதைய ஒரே தேவை நல்ல மழைதான். காரணம், நிலத்தடி நீர் படு பாதாளத்திற்குப் போய் விட்டது. சுற்றுப்புற ஏரிகள் வற்றி வருகின்றன. நீர் நிலைகள் கடும் வறட்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளன.
கண்ணீர்-தண்ணீர்
புறநகர்கள் சற்று பரவாயில்லை. தண்ணீருக்கு இன்னும் பஞ்சம் வரவில்லை. இதன் காரணமாக இங்குள்ள பெரிய பெரிய கிணறுகளிலிருந்து விடிய விடிய இரவு பகலாக தண்ணீர் எடுத்து நகரின் பிற பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதனால் புறநகர்களிலும் விரைவில் தண்ணீர் வற்றிப் போய் கண்ணீரும் கம்பலையுமாக மாறும் சூழல் அதிகரித்துள்ளது.
காற்று வீசும்
இந்த நிலையில்தான் ஃபனி புயல் குறித்த செய்தி வந்தது. ஆனால் அத்தனையும் புஸ்ஸாகி விட்டது தற்போது. மழை வராது, வெறும் மப்பும் மந்தாரமும்தான் என்று வானிலை மையம் கூறி விட்டது. காற்று வீசும் என்றார்கள். ஆனால் அதையும் காணோம். வானம் வெறுமையாக காட்சி தருகிறது. மேகமூட்டமாக உள்ளது. அதேசமயம், வெட்கையும் போகவில்லை. இப்போதான் வெயில் வெளியே வர ஆரம்பித்துள்ளது. இதுகூட எவ்வளவு நேரத்துக்கோ தெரியவில்லை.
ஏக்கம்
ஃபனி புயலின் தாக்கம் இது என்றாலும் கூட ஒரு சொட்டு மழையாவது வந்தால் நல்லாருக்குமே என்று தண்ணீர் தண்ணீர் படத்தில் சரிதா வானத்தை தலை தூக்கிப் பார்த்து ஏக்கம் காட்டுவாரே, அப்படித்தான் சென்னை வாசிகளும் வானம் பார்த்து காத்துள்ளனர்.