தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு? என்ன சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படவில்லை என்றார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து தற்போது, 11 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 79 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கிற்கு புனேவில் இருந்து வந்தடைந்த ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் பார்வையிட்டனர்.
முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் தடுப்பூசி மையங்கள் மிகச் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தற்போது 4487 தடுப்பூசி மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசிடம் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து இதுவரை பெறப்பட்ட 55,85,720 தடுப்பு மருந்துகளில் 48 லட்சம் தடுப்பூசிகளை மக்களுக்குப் போட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி பற்றி வதந்திகள்
தற்போது 1.49 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மாநிலத்தில் கையிருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி குறித்துப் பரவும் வதந்திகள் குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், புதிதாகத் தடுப்பூசி ஒன்று அறிமுகமாகும்போது மக்களிடையே வதந்தி பரவுவது இயல்பான ஒன்றுதான் என்றும் பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இதுவரை இல்லை என்று தெரிவித்த அவர், அதற்கான நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் வேலூர் மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது இல்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது 32,400 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளும் சென்னையில் 6,500 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் சித்தா சிகிச்சை மையங்களும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீணடிக்கப்படும் தடுப்பூசி
தடுப்பூசி வீணாக்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் தடுப்பூசி மையங்கள் அதிகளவில் இருப்பதால் இப்படி இருக்கலாம் என்ற அவர், தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்க சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும், கும்பமேளா சென்று வந்தவர்களுக்கு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விரைவாக ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.