தமிழகத்தில் ஓமிக்ரான் பரவவில்லை.. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் - மா.சுப்ரமணியன்
சென்னையிலும், திருச்சியிலும் ஓமிக்ரான் பரவியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: ஓமிக்ரான் வைரஸ் பற்றிய அச்சமோ, பீதியோ தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையிலும், திருச்சியிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வைரஸ் பரவலை விட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மையுடையது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெங்களூருவில் இருவருக்கு இந்த ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஏ.ஒய். 4.2 கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் இல்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன்
ஓமிக்ரான் பரவவில்லை
இதனிடையே சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு வந்த பயணிக்கும் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த சிறுமிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இது ஓமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இது குறித்து சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவவில்லை என்று கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
சென்னை, திருச்சியில் ஓமிக்ரான் பரவியதாக தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கூறினார். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 136 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரின் மாதிரிகள் ஒமிக்ரான் வகை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரை சேர்ந்த அந்த நபர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாதிரிகள் பரிசோதனை
இங்கிலாந்தில் இருந்த சென்னை வந்த 10 வயது சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே அவர்களுக்கு எந்த மாதிரியான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும் என்றார்.
அரசே கட்டணம் செலுத்தும்
தொடர்ந்து பேசிய மா.சுப்ரமணியன், விமான நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் பயணிகளுக்கு அரசே கட்டணம் செலுத்தும் என்றும் மா.சுப்ரமணியன் கூறினார். ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதால் யாரும் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்றும் மா.சுப்ரமணியன் கூறினார்.
மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்
சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அது தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுமே கண்காணிக்கப்படுவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.