நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது.. களத்தில் 39 வேட்பாளர்கள்
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. நாங்குநேரியில் 46 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டிருந்த நிலையில், அதில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி கட்சி வேட்பாளர்கள் உட்பட சேர்ந்த 24 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதே தேதியில் தேர்தல் நடைபெற உள்ள, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் மொத்தம் 18 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 9 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 9 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி ஆகியோர் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.
நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் ராஜநாராயணன் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.
காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா, நாம் தமிழர் கட்சி பிரவீனா மதியழகன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
நாளை மறுநாள் 3 ம் தேதி மாலை வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.