திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு "போட்டா போட்டி".. இன்றுடன் ஓய்கிறது வேட்புமனுத் தாக்கல்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைபெறும்
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கிளைக் கழகம், பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
பவர்ஃபுல்.. திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவியிட தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல்
மாவட்டச் செயலாளர் தேர்தல்
இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
வேட்புமனுத் தாக்கல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் முதல் மாவட்ட செயலாளர் தேர்தல் என்பதால் இதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
கடும் போட்டி
முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர் என பலரும் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை பெற்று வருகின்றனர்.
முடிவு எப்போது
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 27 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.