நாங்குநேரியில் 36, விக்கிரவாண்டியில் 23 பேர் வேட்புமனு.. மும்முனை போட்டியால் இடைத் தேர்தல் விறுவிறு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் 2 சட்டசபை தொகுதிகளிலும், வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நாங்குநேரியில் 36, விக்கிரவாண்டியில் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 23-ஆம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.
இன்றைய தினம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதியான நாளை நடைபெறும். அக்டோபர் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இரு தொகுதிகளிலும் திமுக vs அதிமுக கூட்டணிகள் நடுவே தீவிர போட்டி இருந்தாலும், இங்கு நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியுள்ளதால், தேர்தல் மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
நாம்தமிழர் கட்சி சார்பில், விக்கிரவாண்டி தொகுதியில் கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணனும் போட்டியிடுகிறார்கள். கந்தசாமி சமூக செயற்பாட்டாளராக உள்ளார். ராஜநாராயணன் பட்டப்படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.