புரட்டாசி எண்ட்.. இனி சின்ராசை கையில பிடிக்க முடியாது.. மீன் மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
சென்னை: புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. புரட்டாசி மாதம் அசைவம் ஏதும் சாப்பிடாமல் பலர் விரதம் பின்பற்றி வந்தனர். இந்த காலக்கட்டத்தில் மீன், கோழி உள்ளிட்ட அசைவங்கள் விற்பனை மந்தமாவதுடன், விலையும் கொஞ்சம் குறைவது வழக்கம்.
அந்த 6 பேருக்கு நன்றி.. 'எல்லோரையும் புரிஞ்சுக்கிட்டேன்'.. வேட்பாளரின் வித்தியாசமான நோட்டீஸ்!
இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் காரணமாக கடந்த சில வாரங்களாக மீன் விலை மற்றும் விற்பனை குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக விரதத்தில் இருந்த பொதுமக்கள் இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவு பெறுவதையொட்டி மீன், இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் அலைமோதுகின்றனர்.
அசைவ பிரியர்கள்
ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை தினத்தில் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி உண்பது வழக்கம். அதுவும் புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று பரவலால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதி இல்லாமல் வியாபாரிகள் மட்டும் அனுமதி இருந்தது.
அதிக அளவில் மீன்கள் விற்பனை
தற்போது அனுமதி அளிக்கப்பட்டு மக்களே வாங்குவதற்காக வருகை புரிந்துள்ளனர். மீன்களின் வரத்து கணிசமாக உயர்ந்து நல்ல விலையில் அதிக அளவில் மீன்கள் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இருந்தபோதிலும் மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் விற்பனை நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்க் அணியவில்லை
ஆனால் மீன் வாங்க வந்த பலர் மாஸ்க் அணியவில்லை. சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பெருமளவு குறைந்து விட்டது. ஆனால் மக்கள் இதுபோல் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்தால் பாதிப்பு உயரும் அபாயம் உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கூட்டம் அலைமோதியது.
இனிமேல் தினமும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் திரளுவார்கள் என்று வியாபரிகள் தெரிவித்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் முக்கிய மீன் மார்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீன் மார்க்கெட்டுகள், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விற்பனை கூடங்களில் கூட்டம் அலைமோதியது.