கோயம்பேடு மார்க்கெட் ஓபன்.. பெங்களூரில் ஐடி ஊழியர்களை ஆபீஸ் வரச் சொல்கிறார்கள்.. இதுவா லாக்டவுன்?
சென்னை: சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 75 நகரங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஆனால் நேற்று 'மக்கள் ஊரடங்கு' முடிந்த நிலையில், இன்று இந்த இரு நகரங்களிலும் பெரும்பாலான மக்கள், 'இயல்பு வாழ்க்கைக்கு' திரும்பியுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு தொடர்பான எந்த ஒரு அறிவார்ந்த புரிதலும் இல்லாத இதுபோன்ற மக்களால், நாடு என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள போகிறதோ என்ற அச்சம் பிறருக்கு உருவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் இதையே காரணமாக வைத்து, ஒரு நாள் வீட்டுக்குள் இருந்தால் போதும், வைரஸ் முழுமையாக குணமடைந்து விடும் என்று போலி தகவல்கள் பரப்பப்பட்டன.
விளக்கம்
இதை அறிந்துதான், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் மோடியும் கூட தங்களது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்.. தொடர்ந்து தனித்து இருப்பதுதான் பலனைக் கொடுக்கும் என்று தெளிவாக தெரிவித்தனர். ஆனால், அப்படியும் இன்று பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் லாக்டவுன் செய்யப்பட்ட சிட்டிகளில் கூட இந்த நிலைதான்.
கோயம்பேடு மார்க்கெட்
சென்னையை பொறுத்த அளவில், காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீண்டும் மீன் விற்பனை தொடங்கியுள்ளது. அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர். அதுமட்டுமா? மூடப்பட்ட, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மார்க்கெட்டை திறந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஒன்று சேர்வதுதான், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.
பெங்களூர் நிலவரம்
பெங்களூரை பொறுத்தளவில், சிறு கடைகள், தேநீர் கடைகள் போன்றவை இன்று காலை முதல் வழக்கம்போல திறந்து இருந்தன. பொம்மனஹள்ளி உள்ளிட்ட கார்மென்ட்ஸ் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கணிசமான கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் திறந்திருந்தன. பாதிக்கு பாதி மக்கள் சாலைகளிலும் தெருக்களிலும் நடமாட ஆரம்பித்து விட்டனர். இவர்களைப்பற்றி பிறரும் படிப்படியாக வீதிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
|
ஐடி நிறுவனங்கள்
பெங்களூரில் உள்ள சில ஐடி நிறுவனங்கள் மற்றும் பயோ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து ரிப்போர்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மடிவாளா பகுதியை சேர்ந்த, பெயர் தெரிவிக்க விரும்பாத ஐடி ஊழியர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், எங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள். ஆனால் பிற, ஊழியர்களை பணிக்கு வர செய்துள்ளார்கள் என்று கூறுகிறார். இதேபோல செல்போன் சார்ந்த உற்பத்தி நிறுவனம் ஒன்றிலும், இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசு கொடுத்துவரும் எச்சரிக்கையை இந்த நிறுவனங்களும், பொதுமக்களும் மதிக்கவில்லை. மத்திய அரசு இந்த நகரங்கள், முடக்கப்பட்டுள்ளது அறிவித்த பிறகும் கூட, இவர்கள் பொருட்படுத்தவில்லை.
விழிப்புணர்வு இல்லையா
கொரோனா வைரஸ் என்பது 14 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகளை வெளிப்படுத்த கூடியது. மக்களிடம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு இது பரவ ஆரம்பித்து விட்டால், ஒவ்வொருவருக்கும் 14 நாட்கள் கழித்து பிரச்சனை ஆரம்பித்தால் என்ன செய்வது? ஒவ்வொருவராக மருத்துவமனையை நோக்கி செல்ல ஆரம்பித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வசதிகள் நம்மிடம் இருக்கிறதா? நம்மிடம் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் இப்படி வசதி கிடையாது. இத்தாலியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்பதற்காக முதிய வயதுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவதாக கூட தகவல் உள்ளது.
ஜாக்கிரதையாக இருங்க மக்களே
அமெரிக்கா போன்ற நாடுகளே இதில் ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை பெருக்கம் கொண்ட ஒரு நாட்டில், சுகாதார வசதிகள் குறைவாக உள்ள ஒரு நாட்டில் இப்படி மக்கள் பொறுப்பற்றத்தனமாக நடந்து கொள்வது எந்த மாதிரி பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தப் போகிறது என்பது உண்மைதான். இதற்கு அரசு நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து பொருளாதாரம் பாதித்துவிடும், வாழ்வாதாரம் பாதித்துவிடும் என்று வழக்கம்போல பணிகளுக்கு திரும்பினால் வாழ்க்கையே பறி போய்விடும் என்பதுதான் உலகம் நமக்கு கற்றுதரும் பாடம். இதை உணர்ந்து மக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வராமல், அரசு அடுத்ததாக அறிவிக்கும் வரை வீட்டுக்குள்ளேயே இருப்பது மட்டும்தான் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.