18 நாளோ, வருஷமோ விவாகரத்து இயல்பானது! கடந்து போங்க.. தனுஷ், ஐஸ்வர்யா விஷயத்தில் நெட்டிசன்ஸ் குட்டு
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து விவாகரத்து இயல்பானது தான் என நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முடிவை ஆதரித்து பேசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் இருவரும் 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த முடிவு தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் நடந்த தனுஷின் காதல் திருமணம் முடிவுக்கு வந்திருக்கும் நேரத்தில், சமூக வலைதளங்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முடிவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசி வருகிறார்கள்.
திருமண பந்தத்தில் இருந்து பிரிவது என்பது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எடுத்த தனிப்பட்ட முடிவு. அதை மதித்து அவர்களுக்கான உரிய நேரத்தை வழங்கவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரஜினியின் மருமகள் என்ற அந்தஸ்தை தனுஷ் இழக்கிறார், ரஜினிக்காக இந்த முடிவை தனுஷ் மாற்றி இருக்கலாம், இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இந்த முடிவை எடுத்துவிட்டனர் என தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் முடிவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அதேசமயம் விவாகரத்து இயல்பானது தான், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வோம் என்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஆதராவக பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
விடாமல் சீண்டப்படும் தனுஷ் - ஐஸ்வர்யா.. புற்றீசல் போல சுற்றிய யூ டியூப் சேனல்கள்.. ஏன் இந்த வன்மம்?
மனசு ஒன்னா இருக்கனும்
''வேத மந்திரம் ஓதி கல்யாணம் பண்ணாலும் எதுவும் ஓதாம பண்ணாலும் மனசு ஒத்துபோகலேன்னா எந்த மந்திரமும் உதவாது. Normalising divorce is good'' என்று ஒப்பிலியா பதிவு செய்திருக்கிறார். அதேபோல், கிரி என்பவர் ''விவாகரத்து இயல்பானதான், ஒரு உறவில் இருந்து வெளியேறுவதும் இயல்பானது தான், திருமணம் செய்யாமல் இருப்பதும், தனியாக வாழ்வதும், குழந்தைகள் இல்லாமல் திருமண பந்தத்தில் இருப்பதும் இயல்பானது தான். முக்கியமாக முதலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இயல்பாக்குங்கள்'' என்று முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.
வி.ஜே.பார்வதி
''தந்தை, கணவன், குடும்பம் அல்லது சாதிப் பெயரைக் குறிப்பிடுவதை விட ஒரு பெண் தன் சுய அடையாளத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவாகரத்து இயல்பானதுதான். நடிகர் நடிகைகள் என்று வரும்போது விவாகரத்து பெரிய விஷயமல்ல'' என்று தொகுப்பாளர் வி.ஜே.பார்வதி தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
எழுத்தாளர் பாரதி தம்பி விவாகரத்து குறித்து நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ''வழக்குரைஞர் நண்பர் ஒருவர் முன்பு எழுதி படித்த நினைவு... 'நீண்ட மணமுறிவு வழக்கின் முடிவில் தீர்ப்பு கிடைத்த பின்பு, இருவரில் யார் அதை விரும்பினார்களோ, அவர்களின் முகத்தில் காணப்படும் நிம்மதியும் விடுபடலும் விவரிக்கவே இயலாது. குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் தினம்தோறும் இத்தகைய ஆசுவாச முகங்களை கடந்துசெல்கிறேன்'.
தனுஷின் பாடல்
வாழ்வின் பொழுதெல்லாம் resentment உணர்வுகளுடன், ஆனால் இணைந்தே இருக்க வேண்டிய நிர்பந்தம் எவ்வளவு பெரிய துயரம்? அதனால், இதுக்கு மேல வண்டி ஓடாதுன்னு முடிவுபண்ணா ஓரம்கட்டி டைவர்ஸ் வாங்குறது மிகச்சரியான முடிவு. அதை இருவரும் சேர்ந்து எடுக்கும்போது ஆதரிக்கனும். அந்த பிரைவசியை மதிக்கனும். ஆனா நாளையிலேர்ந்து YouTube channels-லாம் என்ன பாடுபடுத்த போறாங்க பாருங்க... அந்த, தனுஷ் பாட்டு பாடுற வீடியோவை தூக்கிட்டு ரொம்ப நாளாவே ஒரு குரூப், how romantic-nnu சுத்திட்டிருக்கும். அந்த பாவனைக்குப் பின்னாடி, ரெண்டு பேருக்குமே எவ்வளவு பெரிய வலின்னு இப்பவாச்சும் புரிஞ்சுக்கனும்.
விவாகரத்து இயல்பானது
முதலில் டைவர்ஸ் வாங்கியோரை ஏதோ victims போல பார்ப்பதை நிறுத்தனும். தவறான பேருந்தில் ஏறிவிட்டால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்வதைப்போல், இரு பாலினத்துக்கும் அது அத்தனை இயல்பான நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் பெண்ணின் மறு திருமணம் இயல்பா நடக்கனும். ஒரு உறவில் இருந்து வெளியேறினால் இன்னொரு வாழ்க்கை சாத்தியம்-அதில் எந்த தடையும் இருக்காது என்ற சூழல் ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போதுதான் அது இருபாலருக்கும் நன்மை செய்யும். Normalising divorce என்பதை ஒரு movement போல மேற்கொள்ள வேண்டிய அதேநேரம் மணமுறிவு பெற்ற பெண்கள் மறு திருமணம் செய்துகொள்வதும் normalise செய்யப்பட வேண்டும்'' என்று பாரதி தம்பி பதிவிட்டிருக்கிறார்.
கொண்டாடனும்
''நம்ம ஊர்ல பல பெண்கள் விவாகரத்து வாங்காம இருக்க முக்கியமான காரணங்கள் குழந்தைங்கள், பிறந்தவீட்டின் கெளரவம், பொருளாதார சூழ்நிலை,
இதெல்லாம் காரணம். மோசமான உறவுல இருந்து நமக்கு நாமே கொடுத்துக்குற விடுதலை தான் விவாகரத்து. எல்லாராலும் அந்த விடுதலை காற்ற சுவாசிக்க முடியரது இல்ல. விவாகரத்து கொண்டாடபடவேண்டிய ஒன்று. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை விமர்சனம் செய்வதை நிறுத்துவோம்'' என கீர்த்தனா தமிழ்செல்வன் பதிவிட்டிருக்கிறார்.
Recommended Video
18 நாளா இருந்தா என்ன 18 வருஷமா இருந்தா என்ன
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்ததும், பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தபோது, சங்கர் ராஜா என்பவர் முகநூலில் பதிவிட்டது வைரல் ஆனது. பலர் இதை ஷேர் செய்தார்கள். ''Normalise Divorce News ! Shock ஆக ஒன்னும் இல்ல. புடிச்சுது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, இப்போ புடிக்கல Divorce வாங்கிக்கிட்டாங்க.
18 நாளா இருந்தா என்ன 18 வருஷமா இருந்தா என்ன? கஷ்ட படனுமா இல்ல சந்தோஷ படனுமான்னு அவன் முடிவு செஞ்சுப்பான்.
நீ உன் வேலைய பாரு... அவன் அவனுங்க அவன் வேலைய பாக்கட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளத்தில் பலர் விவாகரத்து இயல்பானது தான், அதில் தவறு எதுவும் இல்லை. விவாகரத்து செய்வோரின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என பெரும்பாலானோர் பதிவிட்டிருந்தனர்.