சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி.. ஒரு மாவட்டமே கூண்டோடு காலி.. அமமுகவுக்கு தாவினர்!
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு தினகரனின் அமமுகவுக்குத் தாவி விட்டனர்.
மொத்த வட சென்னை நிர்வாகிகளும் கூண்டோடு தாவி விட்டதால் வட சென்னையில் சரத்குமார் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம், வட்டம், பகுதி என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 150 நிர்வாகிகள் சரத்குமார் மீதுள்ள அதிருப்தியால் கூண்டோடு விலகியுள்ளதால் அரசியல் வட்டாரமும் பரபரப்படைந்துள்ளது.
அடையாள அட்டையில் குழப்பம்.. கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு.. அதிர்ச்சி!
கடைசி நேர கூட்டணி
எல்லாம் முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போன பின்னர் வந்த விருந்தாளி போல கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வந்துள்ளார் சரத்குமார். அவருக்கு ராஜ்யசபா சீட் தரப் போவதாக கூறப்படுகிறது.
சமகவினர் அதிர்ச்சி
சரத்குமாரின் இந்த கடைசி நேர முடிவால் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆங்காங்கே அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் வட சென்னையில் கட்சி மொத்தமாக கரைந்து போய் விட்டது.
மொத்தமாக தாவல்
வட சென்னை சமக நிர்வாகிகள் 150 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அவர்கள் மொத்தமாக இன்று மாலை தினகரன் முன்னிலையில் அமமுகவில் சேருகின்றனராம். இதற்கான ஏற்பாடுகளை வெற்றிவேல் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
மாவட்டமே பறந்ததால் அதிர்ச்சி
இப்படி ஒரு மாவட்டமே மொத்தமாக ராஜினாமா செய்ததால் சரத்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இதேபோல பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பெரியளவில் பிளவு ஏற்பட உள்ளதாம். 2 நாட்களாக சமாதானம் செய்யும் பணியை மட்டுமே சரத் மேற்கொண்டு வருகிறாராம்.
அடகு வைக்க பார்க்கிறார்
இருப்பினும் பலர் கம்பியை நீட்ட தயாராகிவிட்டனர் என்கிறார்கள். சரத்குமார் அவரது வளர்ச்சிக்காக தங்களை அதிமுகவில் அடகு வைக்க பார்க்கிறார் என்றும், அதனால் தாங்கள் வெளியேறுவதாகவும் வடசென்னை மாவட்ட நிர்வாகி ஒருவர் கருத்து கூறியுள்ளார்.