தமிழகத்தில் இன்று முதல் துவங்கியாச்சு வட கிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் கூல் அறிவிப்பு
சென்னை: வட கிழக்கு பருவமழை இன்று துவங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைக் காலத்தில்தான் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் நல்ல மழை பெறும்.
தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன், 1ம் தேதி கேரளாவில் துவங்கியது. பின்னர், கர்நாடகா, தமிழகத்தின் சில பகுதிகள் என, பல மாநிலங்களுக்கும் பரவி, மழை கொடுத்தது.
மகாராஷ்டிராவின் மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டியதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வட கிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் நின்று விட்டது என்றும், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
துவங்கியது வட கிழக்கு பருவமழை
அதேநேரம், இன்று முதல் வட கிழக்கு பருவமழை துவங்கிவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஆண்டின் 60 சதவீதம் மழைப் பதிவு இருக்கும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்தது.
தாமதம்
சென்ற ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வட கிழக்கு பருவ மழை பெய்தது. இந்த ஆண்டு சுமார் 12 நாட்கள் கழித்து பருவமழை துவங்கியது. இந்த பருவமழை காலகட்டத்தில் சராசரி அளவு அல்லது சராசரியை விட சற்று குறைவாக மழை இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை காலம் நல்ல மழைப் பொழிவு தரவல்லது. தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும் மழை கொடுக்க கூடியது. ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வானிலை மையம்
இந்நிலையில் வட கிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் நின்று விட்டது என்றும், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.