வட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. ஒரே நாள் மழையில்.. நிறைஞ்சு போச்சுய்யா!
சென்னை: வட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. இது வடிவேலு சொன்ன ஜோக்கு.. ஆனால் இப்ப பாருங்க மக்களே.. ஒரே நாள் தான் மழை பெஞ்சுச்சு.. ஒருத்தர் வீட்டு கிணறு கிட்டத்தட்ட அப்படியே நிரம்பிப் போயிருச்சு.. என்னா மழை என்னா மழை என்று சிலாகிக்கிறார் அந்த சிட்டிசன்.
Recommended Video
தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை கோலாகலமாக தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு முதல் செம மழை.. விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.
இந்த முறை பருவ காலத்தின் முதல் நாளிலேயே ஜோராக மழை பெய்து பிள்ளையார் சுழி போட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர்.. ஊரும் கூட அதே போல நீரில் மூழ்கி "ஜிம்பலக்கடி பம்பா" என்று மக்களுக்கு லைட்டாக 2015 பீதியையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
அதெப்படி விட முடியும்
இருந்தாலும் வந்த மழையை அனுபவிக்காமல் விட முடியுமா.. அது தப்பாச்சே.. ஸோ, மக்கள் படு ஜாலியாக இந்த மழையை எதிர்கொண்டு வசந்தமாக உணர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் சில பல டிவீட்டுகளையும் போட்டு ஜோராக கொண்டாடிக் கொண்டும் உள்ளனர். அதிலிருந்து சில உங்களுக்கு..
ஒரே நாளில்
இவர் வீட்டுக் கிணறுக்கு வந்த மழை நீரைப் பாருங்கள்.. என்ன ஒரு மகிழ்ச்சியான காட்சி இது. அமுதம் வழிந்தோடு அது பாற்கடலில் சங்கமிப்பது போல அத்தனை ஒரு அற்புதமான காட்சி இது.. இந்த நீருக்குத்தானே மக்கள் சிரமப்படுகிறார்கள்.. விவசாயி அழுகிறான்.. பயிர்கள் காய்கின்றன.. வயிறுகள் வாடுகின்றன.. நிறைய பெய்ய வேண்டும் இதுபோன்ற மழை.
தேரோடும் எங்க சீரான சென்னையிலே
இதுதான் சென்னை.. இங்க மழை பெய்தால் இப்படித்தான் தண்ணீர் வழிந்தோடி கால்வாயாக மாறும். சமயங்களில் குளமாகும்.. சமயங்களில் கடலாகும்.. இப்படி பல ரூபங்களில் நாங்க மழைக்காலத்தில் மாறிட்டே இருப்போம்.. என்று சொல்லாமல் சொல்கிறது ஈவேரா பெரியார் சாலை.. எழும்பூர்.. ஓடட்டும் ஓடட்டும்.. ஓடி எங்காவது பாதுகாப்பாக போய்ச் சேரட்டும்.. மக்களைக் கஷ்டப்படுத்தாமல்!
நச்சுன்னு ஒரு தொடக்கம்
முதல் நாள் பருவ மழையின் அதி அற்புதம் இது என்று இவர் சிலாகித்துக் கூறியுள்ளார். வட கிழக்குப் பருவ மழையின் முதல் அருமையான மழை என்றும் இவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று 3 மணி நேரம் இதேபோல பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியே பெய்யட்டுமே.. நல்லாதானே இருக்கு.. பாதிப்பு வராத வகையில் பெய்து தீர்த்தால் போதும்.
சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.. ஓ.. பாட்டாவே பாடிட்டேனே.. அதாவது மழைக்காலம் வந்தாலே சூடான வடை, போண்டாவைத் தேடி மனம் அலைவது போல கவிதைகளையும் தேடி மனசு அலையும்.. இந்த பறவைகளைப் பாருங்களேன்.. எத்தனை ஹேப்பியாக "குளிர்" காய்கிறது என்று.. கவிதை சொல்லுங்களேளன்.. யாராவது!
தண்ணித் தொட்டி தேடி வந்த
வீட்டுக்குப் பின்னாடி பெரிய வாட்டர் டேங்க் சார்.. அங்க இருந்து கதை ஆரம்பிக்குது.. இப்படி கதை சொல்லணும் போலவே தோன்றுகிறது இந்தப் படத்தைப் பார்த்தால்.. நேற்று நள்ளிரவுக்கு மேல் பெய்த மழையில் தேங்கிப் போன நீர்தான் இது.. இன்னும் ஒன்றரை மாசத்துக்கு இப்படித்தான் தொட்டித் தொட்டியாக காணப்படும் சென்னை முழுக்க.. என்ஜாய் மக்களே.. ஜாலியாக என்ஜாய்!
அந்த வடை ரெடியாம்மா.. அப்படியே ஹாட்டா ஒரு காபியும்.. இந்தா வர்றேன்!