இன்றுடன் விடைபெறும் தென்மேற்கு பருவமழை.. வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது?
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது தமிழகத்திலும் மழை பெய்து வந்தது. அது போல் வெப்பசலனம் ஏற்பட்ட போதிலும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்தாலும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.
இன்னும் மக்கள் தண்ணீருக்காக நடையாய் நடக்கின்றனர். இதனால் பருவமழையை எதிர்நோக்கி காத்துக் கிடக்கும் சூழல் நிலவியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை
இந்நிலையில் தென் மேற்கு பருவமழை இன்றுடன் விடை பெறுகிறது. இதனிடையே வெப்பசலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த இரு தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்தது.
24 மணி நேரத்தில்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தென்மேற்கு பருவமழை இன்றுடன் விடை பெறுவதால் இன்றோ அல்லது நாளையோ வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் நிலவும். இந்த பருவமழை வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அதேபோல் தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
மழை பெய்ய வாய்ப்பு
இது வருகிற திங்கள்கிழமை வடக்கு அந்தமான் நோக்கி நகர்ந்து, அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுகிறது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.