வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின்போதே, அதிக மழையைப் பெறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் மட்டுமே பரவலாக பயன் கிடைக்கிறது.
ஜூன்-1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலம் . அதன்படி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்றுடன் விடை பெற்றுள்ளது.
வெப்பசலனத்தால் மழை
தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை மாறுபாடு போன்ற வானிலை மாற்றங்களால் மழை இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பரவலாக நல்ல மழையை பெற்றுள்ளன.
தென்மேற்கு பருவமழை அதிகம்
ஜூன்1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலமாகும். நடப்பாண்டு இயல்பை விட நல்ல மழை பெய்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பின், நடப்பாண்டில்தான் தென்மேற்கு பருவமழை, இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்டோபர் 28ல் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை இன்று தமிழகம், கேரளாவில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும். மேலும் வடகிழக்குப் பருவமைழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ பதிவாகும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளனர்.
எங்கே எப்படி பெய்யும்
வடகிழக்குப் பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் சராசரியை விட அதிகமாகவே பொழியும் என்று நல்ல செய்தி சொல்லியுள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
நெல்லை, விருதுநகர், தென்காசி
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை நகரிலும் புறநகர் பகுதிகளிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.