மேல என்னதாம்ப்பா நடக்குது.. மேலும் தாமதமாகிறதாம் வட கிழக்குப் பருவ மழை!
Recommended Video
சென்னை: வடகிழக்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் சென்றுவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
எனினும் அவ்வப்போது மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக ஓரிரு நாட்கள் மழை பெய்தது. என்ற போதிலும் இது தண்ணீர் பஞ்சத்தை போக்கவில்லை.
வானிலை மையம்
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 20 அல்லது 21- ஆம் தேதி பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் 26-ஆம் தேதி இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடங்கும்
அப்போது அவர் கூறுகையில் வடகிழக்கு பருவமழைக்கான காற்று தெற்கு வங்கக் கடலில் வீச தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உள்ளது.
எங்கு மழை
மன்னார் வளைகுடா அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 8 செ.மீ. மழை பெய்தது. தூத்துக்குடி, வேதாரண்யம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பெய்தது.
சென்னையில் மழையில்லை
குமரி, குழித்துறை, தக்கலை மற்றும் சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.