வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28 முதல் தொடங்கும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்
அக்டோபர் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி முதல் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும் தென் தமிழகத்தில் குறைவாகவும் பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இரண்டு பருவமழையும் சரியாக பெய்து அணைகளில் நீர் நிரம்பினால் விவசாயம் செழிக்கும் விலைவாசி உயர்வது கட்டுப்படும்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் சரியாக தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் சரியான அளவில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. செப்டம்பர் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிந்து அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பருவமழை தாமதம்
வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. அத்துடன் இந்திய பசிபிக் கடல் பகுதியில் நிலவ கூடிய லா நினா வெப்பநிலை காரணமாக தென்மேற்கு திசையில் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்குகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்த உடன் வடகிழக்குப் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ல் துவங்கும்
தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா,ராயலசீமா கடலோர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை 28 ஆம்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும் தென் தமிழகத்தில் குறைவாகவும் பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இடியுடன் மழை
தொடர்ந்து பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.