தாமதமாகிறது வடகிழக்கு பருவமழை.. வருகிற 26-ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை: இன்றைக்கோ, நாளைக்கோ வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட போகிறது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் மேலோங்கி வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகுதான் அதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன்காரணமாக தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றுடன் இந்த தென்மேற்கு பருவமழையும் முடிவடைகிறது.
இன்றுடன் விடைபெறும் தென்மேற்கு பருவமழை.. வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது?
வடமேற்கு பருவமழை
இதனிடையே தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வருகிற 22ம் தேதி வடக்கு அந்தமான் நோக்கி நகர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை இன்றோ அல்லது நாளையோ தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
26-க்கு பிறகு தொடங்குகிறது
ஆனால் ஒருவாரம் கழித்துதான் இப்பருவமழை நமக்கு தாமதமாக கிடைக்க போகிறதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வருகிற 26-ம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மேலடுக்கு சுழற்சி
மேலும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன்கூடிய மழை
ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.