வடகிழக்கு பருவமழை முடிஞ்சே போச்சு... எதிர்பார்த்த மழை கிடைக்காமல் ஏமாற்றம்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: இந்தாண்டு தமிழகத்தில் இயல்பை விட 24 சதவிகிதம் மழையளவு குறைவாக பதிவாகி உள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தமிழகத்தின் உட்பகுதிகளில் மூடுபனியும், நீலகிரி மாவட்டத்தில் உறைபனியும் நிலவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 441 மிமீ (சராசரி) மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 337 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும். சில நேரங்களில் ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கும். இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.